ஆப்நகரம்

ஊழியர்களை குறைத்த ஐடி நிறுவனங்கள்... கொரோனாதான் காரணமா?

இந்தியாவின் ஐந்து மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணியமர்த்துவதை கணிசமாக குறைத்துள்ளன.

Samayam Tamil 11 May 2020, 5:35 pm
இந்தியாவின் முன்னணி ஐடி (தகவல் தொழில்நுட்ப) நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை கடுமையாக குறைத்துள்ளன. கடந்த நிதியாண்டில் டெக் மகிந்த்ரா நிறுவனம் பணியமர்த்தல் நடவடிக்கையை கணிசமாக குறைத்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் 40 விழுக்காடு பணியாளர்களை மட்டுமே புதிதாக பணியமர்த்தியது.
Samayam Tamil ஐடி வேலையிழப்பு


விப்ரோ நிறுவனம் மட்டுமே புதிதாக ஊழியர்களை பணியமர்த்துவதை பெரிதாக குறைக்கவில்லை. விப்ரோ நிறுவனத்தில் பணியமர்த்தல் விகிதம் 0.36 விழுக்காடு மட்டுமே குறைந்துள்ளது. எனினும், சில ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் விடுப்பில் அனுப்பப்படலாம் என நான்காம் காலாண்டில் விப்ரோ நிறுவனமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் ஐந்து மிகப்பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகிந்த்ரா ஆகியவை கடந்த நிதியாண்டில் 66,500 புதிய ஊழியர்களை மட்டுமே பணியமர்த்தியுள்ளன. எனினும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 87,060 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

அதிகபட்சமாக டெக் மகிந்த்ராவின் பணியமர்த்தல் விகிதம் 49.80 விழுக்காடு சரிந்துள்ளது. அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பணியமர்த்தல் விகிதம் 40.67 விழுக்காடு சரிந்துள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பணியமர்த்தல் விகிதம் 28.20 விழுக்காடும், டிசிஎஸ் நிறுவனத்தின் பணியமர்த்தல் விகிதம் 17.45 விழுக்காடும், விப்ரோ நிறுவனத்தின் பணியமர்த்தல் விகிதம் 0.36 விழுக்காடும் சரிந்துள்ளது.

ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது குறைந்ததற்கு கொரோனா வைரஸ் கொள்ளை நோய் தாக்கம் காரணமில்லை என்பது வல்லுநர்களின் கருத்து. ஏனெனில், இந்தியாவில் கொரோனா தாக்கம் மார்ச் மாதத்தில்தான் தலைதூக்கியது. ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற புதுயுக தொழில்நுட்பங்களின் விளைவாக ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது குறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊழியர்கள் செய்யக்கூடிய பல்வேறு வேலைகள், ஆட்டோமேஷன் முறையில் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் புதிய ஊழியர்களுக்கான தேவை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்