ஆப்நகரம்

EPFO pension: அதிகம் பென்சன் வேணுமா? இன்னும் ஒரு மாசம்தான் டைம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

EPFO higher pension: அதிக ஓய்வூதியம் பெற ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 4 May 2023, 2:52 pm
இந்தியாவில் மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதிக பென்சன் தொகை பெறுவதற்கு அரசு அவகாசம் வழங்கியுள்ளது. மே 3ஆம் தேதி வரை அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கவில்லை என்றால், இப்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மத்திய அரசிடமிருந்து அதிக ஓய்வூதியம் பெற உங்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pension


இப்போது, அதிக ஓய்வூதியம் பெற ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனுடன், அதிக ஓய்வூதியத்திற்காக பதிவுசெய்து அதற்குத் தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு நிறுவனத்தின் (முதலாளி) பங்களிப்பு 9.49 சதவீதமாக இருக்கும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு இந்த பங்களிப்பு 8.33 சதவீதமாக இருந்தது. இப்போது அதை 9.49 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின்ன்படி, ஊழியர்கள் மாதம் ரூ.15,000க்கு மேல் சம்பளத்தில் 1.16 சதவீதம் கூடுதல் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதில் கொண்டு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இது 2022 நவம்பர் 4ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க செய்யப்பட்டுள்ளது என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952 இப்போது சமூகப் பாதுகாப்புக் குறியீடு -2020 இன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்டத்தின் விதிகளை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக உச்ச நீதிமன்றம் 2022 நவம்பர் 4ஆம் தேதியன்று வெறியிட்ட உத்தரவில், தகுதியான அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய EPFO நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது. இந்த நான்கு மாத காலம் 2023 மார்ச் 3ஆம் தேதியன்று முடிவடைந்தது. இதன் காரணமாக, அதன் கடைசி காலக்கெடு 2023 மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது மத்திய அரசு அந்த தேதியையும் ஜூன் 26 வரை நீட்டித்துள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பயனாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

EPFO அதன் செயல்முறை விவரங்களை வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 2022 நவம்பர் மாதத்தில், உச்ச நீதிமன்றம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை உறுதி செய்தது. முன்னதாக, 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 22ஆம் தேதி இபிஎஸ் திருத்தம், ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை மாதம் ஒன்றுக்கு ரூ.6,500லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தியது.

மேலும், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் தங்கள் சம்பளத்தில் 8.33 சதவீதத்தை EPS திட்டத்துக்கு வழங்க அனுமதிக்கப்பட்டனர். இது இப்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக EPFO தனது கள அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்