ஆப்நகரம்

குறைந்த செலவில் கார் வாங்கணுமா? உங்களுக்கு சூப்பர் நியூஸ்!

குறைந்த செலவில் கார் வாங்குவதற்காக மருதி சுஸுகி நிறுவனம் மாதச் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Aug 2020, 2:47 pm
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பேருந்து, ரயில் என பொதுப்போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. மேலும், மக்கள் கொரோனா அச்சமின்றி பயணிக்க கார் போன்ற தனிநபர் வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், இந்த சூழ்நிலையில் எல்லோரும் பல லட்சங்களை கொட்டி கார் வாங்கிவிட முடியாது. இந்த குறையை தீர்க்கத்தான் புதுப்புது திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
Samayam Tamil maruti suzuki launches subscription plans for easy car finance
குறைந்த செலவில் கார் வாங்கணுமா? உங்களுக்கு சூப்பர் நியூஸ்!


​மாருதியின் அசத்தல் திட்டம்

மக்கள் எளிமையாக கார் வாங்க வழிவகை செய்யும் நோக்கில், இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக மைல்ஸ் ஆட்டோமேட்டிவ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் மாருதி சுஸுகி கூட்டணி அமைத்துள்ளது. இத்திட்டம் முதற்கட்டமாக ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக நாடு முழுவதும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தா திட்டம் என்றால் என்ன?

மாருதி சுஸுகியின் சந்தா திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் ஈசியாக மாதச் சந்தா செலுத்தி காரை பயன்படுத்தலாம். தற்போது மாருதியின் ஸ்விஃப்ட், டிசயர், விட்டாரா பிரெஜா, எர்டிகா, பலேனோ, சியஸ், எக்ஸ்எல்6 ஆகிய கார்களை 12, 18, 24, 30, 36, 42, 48 மாதச் சந்தா திட்டங்களின் மூலம் பெற முடியும்.

எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?

இத்திட்டத்தில் டவுன் பேமண்ட் செலுத்த தேவையில்லை. ஊருக்கு ஏற்ப வாகனங்களின் விலை மாறுபடுகிறது. உதாரணமாக, மாருதி ஸ்விஃப்ட் Lxi வாகனம் புனேவில் ரூ.17,600 மாதச் சந்தாவுக்கு வழங்கப்படுகிறது. இதே வாகனம் ஹைதராபாத்தில் ரூ.18,350 மாதச் சந்தாவுக்கு வழங்கப்படுகிறது. சந்தா கட்டணத்தில் சிறு வேறுபாடுகள் மட்டுமே இருக்கின்றன. சந்தாக் காலம் முடிந்தபின் காரை வாங்குவதற்கான பய்பேக் ஆப்ஷனும் இருக்கிறது.

​கூடுதல் அம்சங்கள்

இத்திட்டத்தில் டவுன் பேமண்ட் கிடையாது. கார் பராமரிப்பு உதவிகள் முழுமையாக வழங்கப்படுகிறது. காப்பீடு வசதி, 24 மணிநேர சாலை உதவி, ரீசேல் ரிஸ்க் கிடையாது போன்றவை இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும். வாகன பராமரிப்பு, இன்சூரன்ஸ், சாலை உதவி போன்றவற்றை மைல்ஸ் நிறுவனம் கவனித்துக்கொள்ளும்.

​மாருதி சொல்வது இதுதான்!

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் மார்கெட்டிங் & சேல்ஸ் துறையின் தலைமை இயக்குநர் சாஷங் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், “மக்கள் பொது போக்குவரத்தில் இருந்து தனிநபர் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எனினும், நீண்டகால அடிப்படையில் நிதிச் சுமை ஏற்படாதவகையில், பாக்கெட்டுக்கு பிரச்சினை நேராதவகையில் கார் வாங்க வேண்டுமென விரும்புகின்றனர்.

இதற்காகவே புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதனால் மாருதிக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்