ஆப்நகரம்

யாரும் ஆஃபீஸ் வர வேண்டாம்.. ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெக்டொனால்ட்ஸ்!

பர்கர் நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் தனது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 Apr 2023, 11:02 am
மெக்டொனால்ட்ஸ் (McDonald's) நிறுவனம் தனது ஊழியர்களை ஆட்குறைப்பு (Layoffs) செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் தனது அலுவலகங்களையும் மூட இருக்கிறது.
Samayam Tamil mcdonalds layoffs
mcdonalds layoffs


உலகளவில் பிரபலமான பர்கர் நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் அமெரிக்காவில் சிகாகோ நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் உணவகங்கள் இயங்கி வருகின்றன.

உலக பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சத்தால் அண்மையில் பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன. ஏற்கெனவே கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா, நெட்ஃபிக்ஸ், ஐபிஎம் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துவிட்டன.

எனினும், ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் பெரும்பாலும் தொழில்நுட்ப துறை சேர்ந்த நிறுவனங்களாகவே இருந்தன. இந்நிலையில், உணவக துறையை சேர்ந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தற்போது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அமெரிக்காவில் உள்ள தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் பணிநீக்கம் தொடர்பான தகவலை ஊழியர்களிடம் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள தனது ஊழியர்களுக்கும், சில சர்வதேச ஊழியர்களுக்கும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ள இமெயிலில், திங்கள் கிழமை முதல் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. நிறுவனத்தில் பொறுப்புகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து இந்த வாரம் முக்கிய முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் இமெயிலில் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களுடன் நேரடி சந்திப்புகளையும், தலைமை அலுவலகத்துக்கு வெளியே திட்டமிடப்பட்டுள்ள அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்யும்படி மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, இன்று அல்லது நாளை மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்