ஆப்நகரம்

மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விலை ரூ.12 லட்சம் உயரும்.. ஏப்ரல் 1 முதல் ரேட் எவ்வளவு?

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை 12 லட்சம் ரூபாய் வரை உயரும்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 9 Mar 2023, 4:25 pm
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக கார்களின் விலையை 12 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்போவதாக மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது
Samayam Tamil mercedes-benz
mercedes-benz


ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவிலும் தனது உயர் ரக ஆடம்பர கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஏற்கெனவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார்களின் விலையை 5% வரை உயர்த்தியது.

மெர்சிடிஸ் பென்ஸ் விலை உயர்வு

இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கார்களின் விலையை மீண்டும் 5% வரை உயர்த்துவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை 12 லட்சம் ரூபாய் வரை உயரப்போகிறது.

பென்ஸ் கார் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ஐரோப்பாவின் நாணயமான யூரோவின் மதிப்புக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துவிட்டது. இதுவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார் விலையை உயர்த்துவதற்கு முக்கிய காரணம் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், கார் உற்பத்திக்கான செலவுகளும் அண்மையில் அதிகரித்துள்ளன. இதை சமாளிப்பதற்காகவும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ் ஐயர், “கடந்த அக்டோபர் மாதம் ஒரு யூரோவுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 78-79 ரூபாயாக இருந்து. இப்போது ஒரு யூரோவுக்கு நிகரான ரூபாய் மதிப்பு 87 ரூபாயாக உள்ளது. இதனால் தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவில் எங்கள் மொத்த தொழிலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கார் விலை எவ்வளவு உயரும்?


ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார் விலையை உயர்த்தப்போகிறது. இதில் A-Class கார் விலை 2 லட்சம் ரூபாய் உயரும். GLA SUV கார் விலை 7 லட்சம் ரூபாய் உயரும். S 350d கார் மற்றும் Maybach S 580 கார்களின் விலை 12 லட்சம் ரூபாய் உயரும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்