ஆப்நகரம்

பால் விலையை உயர்த்த வேண்டும்.. உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 24 Mar 2023, 4:17 pm
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி கோவை கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil milk


கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கீரணத்தம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பாலை கொண்டு வந்து இந்த சங்கத்தில் விற்பனை செய்கின்றனர். அதனை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். மேலும் மீதமுள்ள பாலை ஆவின் நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில் பால் கொள்முதல் விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை எனவும், அதனை தமிழ்நாடு அரசு உயர்த்தித் தர வேண்டும் எனவும் கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

தமிழக அரசின் பட்ஜெட்டில் பாலுக்கு உண்டான கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படுவது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் பால் உற்பத்தியாளர்கள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாடுகளை பராமரிக்க தேவையான வேலையாட்கள், புண்ணாக்கு, பசும் தீவனம், மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகள் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை; கூட்டுறவு சங்கங்களில் கொடுக்கும் பாலுக்கான கொள்முதல் விலை கட்டுபடி ஆகவில்லை; எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்களின் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதற்கு தீர்வு காண பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என அன்பு மணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆவின் பாலை விட தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 26 வரை அதிகமாக உள்ளதாகவும்,. ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் பொதுமக்கள் ஒரு லிட்டர் பாலை ரூ. 26 வரை அதிகமாகக் கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். ஆவின் பாலின் சந்தைப் பங்கு இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு தனியார் பால் விநியோகம் அதிகரிக்கப்படாவிட்டால் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளதாகவும், முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனவும் அன்பு மணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்