ஆப்நகரம்

National Handloom Day: நெசவாளர்களுக்கு மோடி வாழ்த்து!

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Aug 2020, 5:13 pm
இந்தியாவில் உள்நாட்டு பொருட்களின் உற்பத்திக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 1905 ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சுதேசி இயக்கம் துவங்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் 2015ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இன்று தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் கைத்தறி நெசவாளர்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருவதோடு, கைத்தறி ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் எனவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
Samayam Tamil national handloom day


கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ”கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் தேசிய கைத்தறி தினத்தில் நாம் மரியாதை செலுத்துவோம். நம் நாட்டின் பாரம்பரிய கலைப்பொருட்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் அரும் பணிகளைச் செய்துள்ளனர். கையால் செய்யப்படும் உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுத்து தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான இலக்கை அடைவோம்” என்று பதிவிட்டுள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், “நமது நெசவாளர் சமூகம் ஒட்டுமொத்த வளர்ச்சி காணுவதில் மத்திய மோடி அரசு உறுதியுடன் இருக்கிறது. கடுமையாக உழைக்கும் நமது நெசவாளர்களின் உண்மையான செயல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உரிய பங்கு கிடைத்து வருகிறது. அவர்களை மேலும் மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தார். தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக ’உள்ளூருக்கான குரல்’ என்ற பிரகடனத்திற்கு ஆதரவளிக்க நாம் அனைவரும் உறுதி பூணுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மத்திய ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, “1905ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் 2015ஆம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் சுதேசி இந்தியாவுக்காகப் போராடினார்கள். நாமும் சுயசார்பு இந்தியாவுக்குப் பங்களிப்போம், ஆதரவு வழங்குவோம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்