ஆப்நகரம்

வேலைவாய்ப்புகளைத் தின்னும் கொரோனா... நவ்கரி ஆய்வு!

ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் ஆட்சேர்ப்பு நடவடிக்கை 62 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 7 May 2020, 8:28 pm
இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே அதிகமாக இருக்கிறது. போதிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை; உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய அரசின் மீது சுமத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற சூழலில் திடீரெனத் தோன்றிய கொரோனா வைரஸ் இப்பாதிப்புகளை இன்னும் அதிகமாக்கியுள்ளது. மார்ச் மாதத்தில் கொரோனா பீதியால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், தொழில் துறைகள் முடங்கி வேலைவாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. ஏப்ரல் மாதம் முழுவதும் இதே நிலை நீடித்தது. மே 17 வரையில் ஊரடங்கு இருக்கும் நிலையிலும் பாதிப்புகள் தொடர்கின்றன.
Samayam Tamil job


இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் ஆன்லைன் பணியமர்த்தும் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஆன்லைன் வேலை தேடுதல் தளமான நவ்கரி.காம் தெரிவித்துள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்தில் நவ்கரி வேலை தேடுதல் குறியீடு 951 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 2,477 ஆக இருந்தது. ஆன்லைன் பணியமர்த்துதலில் ஏப்ரல் மாதத்தில் 62 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹோட்டல், ரெஸ்டாரண்ட், டிராவல், ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், சில்லறை வர்த்தகம், கணக்குப் பதிவு, நிதி ஆகிய துறைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சாலைகள் அமைக்க ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிதின் கட்கரி!

நகர வாரியாகப் பார்த்தால் டெல்லியில் அதிகபட்சமாக 70 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் 62 சதவீதமும், கொல்கத்தாவில் 60 சதவீதமும், மும்பையில் 60 சதவீதமும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பணியாளர்களின் அனுபவ ரீதியாகப் பார்த்தால், பட்டம் பெற்றவர்கள் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 67 சதவீதம் குறைந்துள்ளன. 4 முதல் 7 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் பிரிவில் 62 சதவீதமும், 8 முதல் 12 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் பிரிவில் 55 சதவீதமும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்