ஆப்நகரம்

கடனாளிகளுக்கு ஆறுதல் தருமா ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு?

ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் மறுசீரமைப்புத் திட்டம் பொதுமக்களுக்கு குறுகிய கால அடிப்படையில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 7 Aug 2020, 3:28 pm
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் பொதுமக்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 23 சதவீதத்தைத் தாண்டியது. குறிப்பாக நகர்ப்புற வேலையின்மைப் பிரச்சினை மிக அதிகமாக உள்ளது. பலர் தங்களது வேலையை இழந்து, சம்பளத்தை இழந்து வாடுகின்றனர். பலரது வேலைவாய்ப்புகள் நிச்சயமற்ற தன்மையில் உள்ளன.
Samayam Tamil loan


இதுபோன்ற சூழலில் கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்துவதற்கு மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கி 3 மாத சலுகை வழங்கியது. பின்னர் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் கடன் சலுகைக் காலமும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 31 வரை ஈஎம்ஐ கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற சூழலில் நேற்றைய நாணயக் கொள்கைக் கூட்டத்தில் கடன் சீரமைப்புத் திட்டத்தை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது குறுகிய காலத்துக்கு கடன் வாங்குபவர்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டியில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தத் திட்டத்தின் படி, நுகர்வோர் கடன், வீட்டுக் கடன்கள், சொத்துகள் மீதான கடன்கள் மற்றும் கல்விக் கடன் போன்ற கடன்கள் வரம்புக்குள் வருகின்றன. அதேபோல, 2020 மார்ச் 1 நிலவரப்படி முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்கள் மற்றும் கடனைச் செலுத்தாமல் மோசடி செய்யும் கடனாளிகளுக்கான பெயர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் போன்றோர் இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இனி தங்க நகைக்கு அதிகக் கடன் கிடைக்கும்!

இந்தத் திட்டம் டிசம்பர் 31 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். மறுசீரமைப்பின் 90 நாட்களுக்குள் இது செயல்படுத்தப்பட வேண்டும். இதில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கூடுதல் சலுகை எதுவும் வழங்கப்படாது. கடன் வாங்கியவர் இரண்டு வருடங்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தும் விடுமுறையைப் பெற்றிருந்தாலும், அந்தக் காலத்திற்கான கடனுக்கான வட்டியைக் கண்டிப்பாகச் செலுத்தித்தான் ஆகவேண்டும். இந்தத் திட்டம் அடிப்படையில் கடன் வாங்குபவர்களுக்கு கொரோனாவின் தாக்கத்தை சமாளிக்க கால அவகாசம் வழங்குகிறது. ஆனால் இது நீண்ட கால அளவில் அவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்