ஆப்நகரம்

ரயில் பயணிகளுக்கு இனி பிரச்சினையே இருக்காது.. புது ரூல்ஸ் வந்தாச்சு!

ரயிலில் பயணிகள் நிம்மதியாகத் தூங்குவதற்காக புதிய விதிமுறைகளை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது.

Samayam Tamil 29 Sep 2022, 4:39 pm
இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் ரயில் பயணங்களையே அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் முதன்மை தேர்வாக ரயில்கள் உள்ளன. பேருந்து, விமானம் போன்ற போக்குவரத்து வசதிகளை விட ரயில் பயணத்தில் டிக்கெட் கட்டணம் குறைவு. பாதுகாப்பும் அதிகம். சௌகரியமாகவும் பயணிக்கலாம்.
Samayam Tamil new rules


அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், உங்களுக்கு மிக முக்கியமான செய்தி வந்துள்ளது. ரயில் பயணிகள் பெரும்பாலும் சந்திக்கும் பிரச்சினை இரவு நேரங்களில் தூங்கும்போது சக பயணிகள் கொடுக்கும் தொந்தரவுதான். பக்கத்தில் இருக்கும் பயணிகளுக்கு தொந்தரவு ஆகுமே என்று கூடப் பார்க்காமல் சத்தமாக போனில் பேசிக் கொண்டிருப்பார்கள். அதேபோல, சிலர் சத்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதுகூடப் பரவாயில்லை; இரவு நேரங்களில் கூட்டமாக அமர்ந்து சத்தமாகப் பேசிக் கொண்டும் இருப்பார்கள். இதனால் அருகில் இருக்கும் பயணிகளால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியாது. இனி இதுபோன்ற பிரச்சினையே இருக்காது. அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய விதிமுறையை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது. இதன்படி சக பயணிகளை இவ்வாறு யாராவது தொந்தரவு செய்தால் உடனடியாகப் புகார் கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


இந்த விதிமுறை விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது. அதன் பிறகு ரயில் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். நிம்மதியான பயணம் அவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்