இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மந்தமாக இருப்பதற்கு மத்திய அரசின் மனப்போக்குதான் காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதோடு, உயர் மதிப்பு நோட்டுகளைச் செல்லாதவையாக அறிவித்தது (பணமதிப்பழிப்பு), சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் மோடி அரசுக்கு எதிரான அதிர்வலைகளை அதிகரித்தன. இவற்றின் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வந்தாலும், இச்சீர்திருத்தங்களுக்கான நோக்கம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.
மோடி அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் விதமாகத் தற்போது எழுந்துள்ளது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகலா பிரபாகரின் கருத்து.
இதுகுறித்து பரகலா பிரபாகர், “நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசானது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகளை வகுக்க விருப்பம் காட்டவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு துறையும் ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் பாஜக தயக்கம் காட்டுவதே இதற்கு முக்கியக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நேருவின் பொதுநலக் கோட்பாட்டை விமர்சிப்பதற்குப் பதிலாக, பொருளாதாரத் தாராளமயமாக்கலுக்கு வழி வகுத்த ராவ் சிங்கின் பொருளாதார மாதிரியை பாஜக பின்பற்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருவதாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அவரது கணவரே அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.