ஆப்நகரம்

ஏர் இந்தியாவா... அது எங்களுக்கு வேண்டாம்... பதறும் துபாய் நிறுவனம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 Jan 2020, 6:06 pm
மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனம்தான் ஏர் இந்தியா. இந்திய விமானச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியாலும், விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளாலும் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா தவித்து வருகிறது. ஏர் இந்தியாவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருப்பதோடு, தனது ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறது. அரசு தரப்பிலிருந்து அவ்வப்போது மூலதன உதவிகள் வழங்கப்பட்டாலும் அது ஏர் இந்தியாவின் லாபத்தை அதிகரிக்க உதவியாக இல்லை. இதுபோன்ற சூழலில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
Samayam Tamil ஏர் இந்தியாவா அது எங்களுக்கு வேண்டாம் பதறும் துபாய் நிறுவனம்


முதலில் ஏர் இந்தியாவின் 76 சதவீதப் பங்குகள் மட்டும் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, அதன் பங்குகளை வாங்க எவரும் முன்வரவில்லை. பின்னர் வேறு வழியின்றி ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவுசெய்த மத்திய அரசு, அதற்குச் சில சலுகைகளையும் அறிவித்தது. ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை வளர்க்குமா மத்திய பட்ஜெட்?

ஏற்கெனவே, ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இச்செய்தியை எமிரேட்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து எமிரேட்ஸ் நிறுவனம் அளித்துள்ள பதிலில், “நாங்கள் ஏற்கெனவே ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை வழங்கி வருகிறோம். எனவே இப்போது ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்கும் திட்டம் எதுவும் இல்லை. எங்களது நிறுவனத்தின் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” என்று கூறியுள்ளது.

Bank strike: இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மும்பை - டெல்லி வழித்தடத்தில் முதன்முதலாக விமானச் சேவையைத் தொடங்கியதாகவும், தற்போது வாரத்துக்கு 170 விமானங்களை ஒன்பது இந்திய நகரங்களிடையே இயக்குவதாகவும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்குவது குறித்து பதில் எதையும் அளிக்கவில்லை. கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியாவின் விற்பனை கடினமான ஒன்றாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்