ஆப்நகரம்

தெருவோர வியாபாரிகளுக்குக் கடன்: ஒரு லட்சம் பேர் பயன்!

பிரதமரின் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 12 Aug 2020, 8:46 pm
’பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா’ எனப்படும் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டம் கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும். இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். இதில் வாங்கும் கடன் ஓராண்டு காலத்தில் மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.
Samayam Tamil street vendors


உரிய காலத்தில் இந்தக் கடன் தொகையைச் செலுத்தினாலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தினாலோ ஆண்டொன்றுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும். குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் செய்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1,200 ரூபாய் ரொக்கம் அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும். முறையாக கடனை திருப்பி செலுத்துபவர்கள் அடுத்த கட்ட கடன் வாங்கும்போது கடன் தொகை அதிகரித்துப் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள் என்பது கூடுதல் அம்சமாகும்.

தெருவோர வியாபாரிகள் கடன் வாங்கப் புதிய வசதி!

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 41 நாட்களுக்குள் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஸ்வநிதி திட்டத்திற்கு தெருவோர வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவும், ஊரடங்கு காலத்துக்குப் பிறகு, தங்களது வியாபாரத்தை மீண்டும் துவங்குவதற்காக திருப்பிச் செலுத்தக்கூடிய அளவிலான பணி மூலதனக் கடன் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்த தெருவோர வியாபாரிகளுக்கு இத்திட்டம் உற்சாகம் அளித்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்