ஆப்நகரம்

நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பேரிடர் நிவாரணத்துக்காக வரி உயர்வு?

நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேரிடர் நிவாரணத்துக்காக கார்களுக்கான வரி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 6:21 pm
நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கார்களுக்கான வரி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
Samayam Tamil file6x3kv9l0umx1ggqwcdg7153210


30வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கின்றனர். இதில் தேசிய பேரிடர் நிவாரண நிதியை அதிகரிக்கும் நோக்கில் கார்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரி விகிதம் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது.

அண்மையில் கேரளா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலங்களுக்கு நிதி திரட்டும் விதமாக ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்து கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டுவதற்காக குறுகிய காலத்திற்கு சில பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது பற்றி பரிந்துரைத்துள்ளார். நாளை சில பொருட்கள் மீது ஜிஎஸ்டி விகிதம் உயரும் என்பதற்கு இச்சந்திப்பும் ஒரு காரணமாக அமையலாம்.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.93,960 கோடியாக சரிந்துள்ளது. இது இந்த ஆண்டில் மிகக்குறைவானது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வருவாயும் ரூ.96,705 கோடியாக உள்ளது. இது அரசு எதிர்பார்த்த தொகையைவிடக் குறைவு. இதனால், அரசின் வருவாயை சரிசெய்யும் விதமாகவும் சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் உயரும் எனக் கருதப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 279A (4) ல் செய்யப்பட்ட திருத்தத்தின் படி, ஜிஎஸ்டி கவுன்சில் பேரிடர் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி திரட்டுவது போன்ற முக்கியமான விவகாரங்களுக்காக குறுகிய காலத்திற்கு வரி விகிதத்தை உயர்த்தவோ, புதிய வரியை விதிக்கவோ முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்