ஆப்நகரம்

CPS திட்டம் ரத்து..? தமிழக அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்!

தமிழகத்தில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 23 Sep 2022, 9:11 am
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் 2003ஆம் ஆண்டில் அமல்படுத்திய பின்பு 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இரண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. 2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் CPS திட்டத்தை ரத்து செய்வோம் என திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தாமாக முன் வந்து வாக்குறுதி அளிக்கவில்லை.
Samayam Tamil cps


ஆனால், 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 10 நாள் வேலை நிறுத்தத்தின் விளைவால் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக CPS திட்டத்தை ரத்து செய்வோம் என்று திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வாக்குறுதி அளித்தன.

அதன்படி, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு ஊழியர்களின் போராட்டத்தால் CPS திட்டத்தை ரத்து செய்திட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் திமுக அரசு உறுதியளித்தபடி இன்னும் தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாக்குறுதி அளிக்காமலேயே பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் குறிப்பாக CPS ஒழிப்பு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். சமீபத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட ஈடுபட்டனர். இதையடுத்து திமுக அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிற்றுவோம் என்று ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

இந்நிலையில், CPS திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று ஒருநாள் (செப்டம்பர் 22) CPS ஒழிப்பு அமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 2016ஆம் ஆண்டைப் போல் வேலை நிறுத்தம் செய்தால் CPS திட்டத்தை நிச்சயம் ரத்து செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தத்திற்கு முன் தயாரிப்பாக, செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு நாள் "தற்செயல் விடுப்பு போராட்டம் " நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தற்செயல் விடுப்பில் தமிழக அரசு ஊழியர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று CPS ஒழிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்