ஆப்நகரம்

1 % பணக்காரர்களின் கையில் 40 சதவீத இந்தியா.. அப்போ ஏழைகளின் கதி என்ன?

இந்தியாவில் அதிக சொத்து படைத்த பணக்காரர்களில் ஒரு சதவீதத்தினர் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதத்துக்கு மேல் கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 17 Jan 2023, 2:49 pm
’ஏழை இன்னும் ஏழையாகிறான் - பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான்’ என்ற கூற்று உள்ளது. இந்தியாவுக்கு அது மிகவும் கச்சிதமாகப் பொருந்தும். காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு தரப்பினர் முன்னேறிச் சென்றாலும் அதற்கு எதிர் திசையில் இன்னொரு தரப்பினர் மிகவும் பின்னோக்கிச் செல்கின்றனர். பணம் என்ற ஒன்றுதான் இந்த இரு தரப்பினருக்கும் இடையில் பெரிய வித்தியாசமாக உள்ளது.
Samayam Tamil rich report


இந்தியாவில் ஒரு பக்கம் அதானிகளும் அம்பானிகளும் அதிகரித்து வந்தாலும், இன்னொரு பக்கம் குப்பனும் சுப்பனும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். வறுமையை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்தாலும் இன்னும் முழுவதுமாக வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஏதோ ஒரு கடைக் கோடியில் யாரேனும் ஒருவர் ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாத சூழல் உள்ளது. மறுபுறமோ ஒரு பிரிவினர் கோடிகளில் புரளுகின்றனர்.

சொத்து மதிப்பு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய பணக்காரர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் இருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. 2020அம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 102 ஆக மட்டுமே இருந்தது. ஆக்ஸ்பம் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இந்தியாவில் வறுமையில் வாடும் பலர் தங்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் வாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 46 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேநேரம், இந்தியாவின் அதிக சொத்து படைத்த முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 660 பில்லியன் டாலராக உள்ளது. 2022ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுக்கான புளூம்பெர்க் பட்டியலில் கவுதம் அதானி இரண்டாம் இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்திருந்தார்.

பணக்கார மக்களை விட ஏழை எளிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும்தான் அதிகளவில் வரி செலுத்துவதாகவும், இதனால் நிதி நெருக்கடியைச் சந்திப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வசூலிக்கப்பட்ட தொகையில் சுமார் 64 சதவீதம் என்பது சொத்து மதிப்பில் கடைசி 50 சதவீதத்தைக் கொண்ட மக்களிடம் வசூலிக்கப்பட்டதாகும். அதேநேரம், பட்டியலில் முதல் 4 சதவீதத்தில் இருப்பவர்கள் வெறும் 4 சதவீதம் அளவில் மட்டுமே ஜிஎஸ்டியில் பங்களிப்பைக் கொண்டிருப்பதாகவும் இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


பொதுமக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இந்தியா, சர்வதேச அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் உள்ளது. ஆனால் வறுமை ஒழிப்பில் மிகவும் பின்தங்கி இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்