ஆப்நகரம்

பெண் குழந்தை இருக்கா? கவலைய விடுங்க.. பணப் பிரச்சினையே இருக்காது!

பெண் குழந்தை பெயரில் போஸ்ட் ஆபீஸில் இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்குங்கள்.. குழந்தையின் எதிர்காலத்தை பிரகாசமாக்குங்கள்!!

Samayam Tamil 28 Sep 2022, 2:29 pm
என்ன திட்டம் இது?
Samayam Tamil SSY


பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.

என்ன தகுதி?

இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். குழந்தையின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் நிலையம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கலாம்.

வட்டி எவ்வளவு?

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது. 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

கணக்கு தொடங்குவது எப்படி?

அருகிலுள்ள தபால் நிலையத்திலேயே நீங்கள் கணக்கு தொடங்கலாம். செல்வ மகள் திட்டத்தின் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தைச் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். உடனடியாக உங்கள் குழந்தை பெயரில் கணக்கு திறக்கப்பட்டுவிடும். செல்வ மகள் சேமிப்புக் கணக்கு திறக்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. வருடந்தோறும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம்.

என்னென்ன தேவை?

இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகளைச் சேர்க்க வயதுச் சான்றாக பிறப்புச் சான்றிதழைக் கொடுக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாதபட்சத்தில், ஆதார் கார்டு தேவைப்படும். பெற்றோரின் ஆதார் கார்டும் அவசியம்.

பணம் போடுவது எப்படி?


தபால் நிலையத்திலேயே நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி புத்தகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். ஒருவேளை தபால் நிலையத்துக்கு அலைய வேண்டாம் என்று நினைத்தால் ஆன்லைனிலேயே பணம் செலுத்தும் வசதி உள்ளது. IPPB ஆப் மூலமாக நீங்கள் பணம் செலுத்த முடியும்.

கணக்கு மூடப்படும்!


கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். தொடர்ச்சியாக டெபாசிட் செய்யாமல் இடைவெளி விட்டால் கணக்கு மூடப்பட்டுவிடும். பிறகு டெபாசிட் தொகையுடன் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்தினால்தான் கணக்கை புதுப்பிக்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்