ஆப்நகரம்

மாத்ரு வந்தனா யோஜனா.. தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர் பயன்!

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் 12.68 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 9 Feb 2023, 2:54 pm
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நேரடிப் பரிமாற்றப் பலன் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளின் வங்கி / அஞ்சல் சேமிப்புக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை ரூ.5,000 செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
Samayam Tamil PMMVY


இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது. இந்த 5000 ரூபாய் நிதியுதவி என்பது மொத்தம் மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. வீட்டிலிருக்கும் பெண்களோ அல்லது வேலைக்குச் சென்று பிரசவத்துக்காக வீட்டில் இருக்கும் பெண்களோ போதிய நிதி இல்லாமல் தங்களது கர்ப்ப காலச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக இந்த உதவி அரசிடமிருந்து வழங்கப்படுகிறது.

முதல் தவணையில் 1000 ரூபாய், இரண்டாம் தவணையில் 2000 ரூபாய் மற்றும் மூன்றாம் தவணையில் 2000 ரூபாய் என படிப்படியாக வழங்கப்படுகிறது. கர்ப்பத்துக்காக பதிவு செய்த பின்னர் தடுப்பூசி போடுவதற்கான பதிவு அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு அரசு சுகாதார மையத்தில் ஒருமுறையாவது பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். கர்ப்பம் தரித்த 150 நாட்களுக்குள் இந்த நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தவணைப் பணத்தைப் பெறுவதற்கு குழந்தை பிறப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம். பயனாளியின் ஆதார் கார்டு, அடையாள முகவரி ஆவணம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மருத்துவச் சான்றுகள் ஃபார்ம் 1ஏ, 1பி, 1சி ஆகிய ஆவணங்கள் அவசியம். https://pmmvy-cas.nic.in/public/beneficiaryuseraccount/login என்ற வெப்சைட் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு நேரடியாகச் சென்றும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

வருகிறது உத்தரவாத ஓய்வூதியத் திட்டம்? இனி அரசு ஊழியர்களுக்கு கவலையே இல்லை!

இத்திட்டத்துக்கான நிதியுதவி வங்கி அல்லது தபால் நிலையம் வாயிலாக மட்டுமே கிடைக்கும். அதேபோல, பயனாளியின் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். ரொக்கப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ தரப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்நிலையில், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில், கடந்த 2019-20ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 5,24,185 பேருக்கும், 2020-21ஆம் ஆண்டில் 4,69,571 பேருக்கும், 2021-22ஆம் ஆண்டில் 2,74,703 பேருக்கும் இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நேற்றைய மாநிலங்களவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்