ஆப்நகரம்

தமிழகத்தில் 4 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

கொரோனா சமயத்தில் தமிழகத்தில் 4 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Sep 2020, 8:14 pm
இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதலே கொரோனா பாதிப்பால் வேலையின்மை பிரச்சினை அதிகமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்களும் நாடு திரும்பிவிட்டனர். அவர்கள் மீண்டும் பழைய வேலைக்குத் திரும்புவதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சூழலில் இந்திய அளவிலும் தமிழகத்திலும் வேலையை இழந்த பலருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil skill


கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் வேலையை இழந்து தமிழகத்துக்கு திரும்பி வந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங், பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மார்ச் 17ஆம் தேதி வரையில், குறுகிய கால படிப்புகள் திட்டத்தின் கீழ் 2.25 லட்சம் பேருக்கும், முந்தைய கற்றலுக்கு அங்கீகாரம் திட்டத்தின் கீழ் 1.79 லட்சம் பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஏற்றுமதியை கீழே இறக்கிய கொரோனா!

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வேலை இல்லாமல் தாயகம் திரும்பிய இளைஞர்களுக்கு தனியாக திறன் மேம்பாட்டு பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களில் பதிவு செய்து கொள்ளலாம். வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் வேலைவாய்ப்புகளை அணுகும் வகையில் இந்திய அரசின் சுவதேஸ் திட்டம், திறன் கண்டறிதல் வசதியை அளித்து வருகிறது” என்றார்.

70,000 பேருக்கு வேலை கொடுக்கும் ஃபிளிப்கார்ட்!

மேலும், திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் மேற்கூறிய இரண்டு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், அதில் பயிற்சி பெற்றவர்களில் 1.15 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2.51 லட்சம் பேர் முந்தைய கற்றலுக்கு அங்கீகாரம் திட்டத்தின் கீழ், இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், மாநில திறன் மேம்பாட்டு இயக்கம் ஆகியவை இதற்காக நியமிக்கப்பட்ட பயிற்சி அளிப்பவர்கள் மூலம் , பிரதமர் கவுசல் விகாஸ் திட்டத்தை அமல்படுத்தி வருவதாக ஆர்.கே.சிங் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்