ஆப்நகரம்

மறுபடியும் என்னாச்சு? பெட்ரோல் விற்பனை சரிவு!

ஊரடங்கு தளர்ந்தும் ஜூலை மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Samayam Tamil 4 Aug 2020, 3:11 pm
இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து பொதுப் போக்குவரத்து, தொழில் நடவடிக்கை அனைத்தும் முடங்கியதால் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை முற்றிலும் குறைந்துபோனது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் - டீசல் விற்பனையில் சரிவு ஏற்பட்டது.
Samayam Tamil petrol diesel sales


எனினும் மே மாதம் முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு தொழில் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் தொடங்கின. பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும் மீண்டும் இயங்கின. இதனால் மே, ஜூன் மாதங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை அதிகரித்தது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் பெரும் பங்கு வகிக்கும் டீசல் விற்பனை ஜூலை மாதத்தில் 21 சதவீதம் வீழ்ச்சியடைந்து 4.85 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்துள்ளது. அதேபோல, ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Petrol Price in Chennai: இன்றைய விலை நிலவரம் இதுதான்!

பெட்ரோல் விற்பனையைப் பொறுத்தவரையில், 11.5 சதவீத வீழ்ச்சியுடன் மொத்தம் 2.03 மில்லியன் டன் அளவு மட்டுமே ஜூலை மாதத்தில் விற்பனையாகியுள்ளதாகப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்திருந்தாலும் சமையல் எரிவாயு விற்பனை ஜூலை மாதத்தில் சற்று வளர்ச்சி கண்டுள்ளது. 3.5 சதவீத வளர்ச்சியுடன் மொத்தம் 2.275 மில்லியன் டன் அளவு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, விமான எரிபொருள் விற்பனை 4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்படாதது, சில மாநிலங்களில் வெள்ள பாதிப்பால் தொழில் நடவடிக்கைகள் முடங்கியது போன்ற காரணங்களால்தான் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்