ஆப்நகரம்

கொரோனாவால் கசப்பான அன்னாசி... கவலையில் விவசாயிகள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அன்னாசிப் பழங்களுக்கான தேவை குறைந்து விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Mar 2020, 9:20 pm
வழக்கமாக வட இந்தியாவில் குளிர் காலம் மறைந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில் அன்னாசிப் பழங்களுக்கான தேவை உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது கொரோனா வைரஸ் மீதான அச்சத்தால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஏ-கிரேடு அன்னாசிப் பழங்களின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.20 ஆகவும், புவிசார் குறியீடு பெற்ற வழக்குளம் அன்னாசிப் பழங்களின் விலை கிலோ ரூ.30 ஆகவும் இருந்துள்ளது.
Samayam Tamil கசப்பான அன்னாசி கவலையில் விவசாயிகள்


இதுகுறித்து கேரள அன்னாசி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பேபி ஜான் பேசுகையில், “மார்ச் 5ஆம் தேதி வரை அன்னாசிப் பழங்களின் விலை சீராக இருந்தது. தற்போது அவற்றின் விலை சரியத் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடுவதில்லை. இதனால் பழங்களின் விலை சரிந்துள்ளது.

அன்னாசிப் பழங்களுக்கான முக்கிய சந்தைகளாக டெல்லி, மகாராஷ்டிரம் ஆகியவை இருக்கின்றன. ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் முதல் அன்னாசிப் பழங்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தமிழ்நாடு, குஜராத் போன்ற சந்தைகளில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரிதாக இல்லை. ஆனால் வரும் நாட்களில் கொரோனா மற்ற இடங்களுக்கும் பரவும் என்பது பற்றி விழிப்புணர்வுடன் இருக்கிறோம்” என்றார்.

மேலும் அவர், “ஒரு கிலோ அளவிலான அன்னாசிப் பழங்களை உற்பத்தி செய்வதற்கான செலவு ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. இதில் பயிருக்கான செலவு, குத்தகை, நிலத்தை தயார்படுத்துவதற்கான செலவு உள்ளிட்டவை அடங்கும். மேலும், யூரியா விலையை அதிகரிக்க அரசு எடுத்துள்ள முடிவு விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும். ஏனெனில், அன்னாசி உற்பத்திக்கான பிரதான உரமே யூரியாதான்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்