ஆப்நகரம்

கொரோனா காலத்தில் கோதுமை கொள்முதலில் சாதனை!

ஊரடங்கு காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Jun 2020, 2:56 pm
கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்கள் பேருதவியாக இருக்கின்றன. தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் மற்றும் இதர மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்காக ஒரு மாதத்திற்கு சுமார் 55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே தேவையான உணவு தானியங்களை இருப்பில் வைத்திருப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அறுவடை செய்யப்பட்ட உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து இருப்பும் வைக்கும் பணியில் கொள்முதல் மையங்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil wheat


இந்தியாவில் கோதுமைக்கான அறுவடைப் பணி வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கும். அறுவடை செய்யப்பட்ட கோதுமை ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா பீதியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கோதுமை அறுவடைப் பணியிலும் கொள்முதல் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதன்படி, விவசாயிகளிடமிருந்து அரசு அமைப்புகள் ஜூன் 16 நிலவரப்படி, மொத்தம் கொள்முதல் 382 லட்சம் மெட்ரிக் டன் அளவு கோதுமையைக் கொள்முதல் செய்துள்ளது.

சீனாவுக்கு எதிர்ப்பு... டிக்டாக்கில் மட்டும் கவனம்!

கடந்த 2012-13ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 381.48 லட்சம் மெட்ரிக் டன் அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக இந்த ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் துவக்கத்தில் கொள்முதல் பணி தாமதமானதால் இந்த ஆண்டு கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை 14,738லிருந்து 21,869 ஆக அதிகரிக்கப்பட்டது. வழக்கமான கொள்முதல் மையங்களுடன் கூடுதலாக அனைத்து இடங்களிலும் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 129 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

விரட்டப்படும் சீன நிறுவனங்கள்... சீனாவுக்கு இவ்வளவு இழப்பா?

அரசின் தீவிரமான கொள்முதல் பணியால் நாடு முழுவதும் 42 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.73,500 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது. கோதுமை மட்டுமல்லாமல் நெல் கொள்முதல் பணியும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 13,606 கொள்முதல் மையங்கள் மூலம்119 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை அரசு அமைப்புகள் கொள்முதல் செய்துள்ளன.

Sensex Today: லாபம் தரும் பங்குகளின் விவரம்!

தெலங்கானாவில் அதிகபட்சமாக 64 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆந்திரப் பிரதேசத்தில் 31 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் 4 லட்சம் மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்