ஆப்நகரம்

EMI, கடன் வட்டி உயருமா? ரிசர்வ் வங்கி கூட்டம் தொடக்கம்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2022, 5:16 pm
புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறும். அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Samayam Tamil RBI


இதற்கு முன் பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற்றது. அப்போதும் பணவீக்கம் கடுமையாகவே உயர்ந்திருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

இதற்கு முன் கடைசியாக 2020 மே மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றியது. அதன்பின் இப்போது வரை வட்டி விகிதம் தொடர்ந்து 4% ஆகவே இருந்து வருகிறது. அண்மையில் பணவீக்கம் மேலும் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியபின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் பால், டீ, தீப்பெட்ட், சோப் என ஏராளமான சாதாரண பொருட்களின் விலை கூட உயர்ந்துவிட்டது. இந்த சூழலில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது.

நான்கு ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தியுள்ளது பணவீக்கத்தின் அழுத்தத்தை உறுதிப்படுத்துகிறது. வழக்கமாக அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் மற்ற நாடுகளிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும்.

இந்நிலையில், இன்று முதல் ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் வட்டி உயர்வு, பணவீக்க அழுத்தம் என பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இந்த முறையும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது எனவே பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் என்னாகும்?

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் கடன் வட்டி விகிதம், EMI கட்டணம் ஆகியவை உயரும். மேலும், ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களுக்கு கிடைக்கும் வட்டியும் உயரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்