ஆப்நகரம்

அடுத்த 2000 ரூபாய் ரெடி... பதிவு பண்ணலனா பண்ணிடுங்க!

ஆதார் கண்டிப்பா வேணும்...

Samayam Tamil 11 Feb 2021, 10:43 am
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் எட்டாவது தவணைப் பணம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பதிவு செய்யாத விவசாயிகள் விரைவில் பதிவுசெய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எப்படி பதிவு செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil register yourself to get pm kisan money 2000 rs 8th installment coming
அடுத்த 2000 ரூபாய் ரெடி... பதிவு பண்ணலனா பண்ணிடுங்க!


பிஎம் கிசான் திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பலர் இன்னும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் உள்ளனர்.

பணம் இவர்களுக்கு மட்டுமே!

இத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் நிதியுதவி கிடைத்துவிடாது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

பதிவு செய்வது எப்படி?

பிஎம் கிசான் நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். பி.எம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

pmkisan.gov.in என்ற வலைதளத்தில் சென்று farmers corner என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ‘New Farmer Registration’ என்பதை கிளிக் செய்து கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட வேண்டும். ஆதார் நம்பரையும் பதிவிடவும். உங்களது மாநிலம் மற்றும் இதர விவரங்களைப் பதிவு செய்யவும். வங்கிக் கணக்கு மற்றும் நில விவரங்களைப் பூர்த்தி செய்து இறுதியில் 'submit' கொடுக்கவும்.

இது முக்கியம்!

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன் தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும். விவசாயிகள் தங்களது பெயரைத் திருத்தம் செய்ய மற்றும் கோரிக்கை நிலையைத் தெரிந்துகொள்ள பிஎம் கிசான் போர்டலில் farmers corner வசதியைப் பயன்படுத்தலாம். நிதியுதவியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் இந்தப் பக்கத்தில் விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம். 011-24300606 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்தும் விவசாயிகள் தங்களது விண்ணப்ப நிலையைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்