ஆப்நகரம்

மீன்வளத் துறைக்கு ரூ.38,500 கோடி.. மத்திய அரசு ஒதுக்கீடு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத் துறைக்கு ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 May 2023, 12:34 pm
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நீலப்புரட்சி திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி, பிரத மந்திரி மத்சய சம்பதா திட்டத்துக்கு ரூ. 20,000 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 7,500 கோடி, படகுகளைப் பதிவு செய்தல், டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ரூ. 6,000 கோடி என இதுவரை மொத்தமாக ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளம் இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil fishery


இரண்டு நாள் பயணமாகப் புதுச்சேரி வந்துள்ள இணையமைச்சர் எல். முருகன் நேற்று (14.05.2023) காலை வைத்திக்குப்பத்தில் மீனவர்களின் குறைகேட்புக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 76 கோடி மதிப்பீட்டில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. காசிமேடு உள்ளிட்ட ஐந்து மீன்பிடி துறைமுகங்களை சர்வதேச அளவில் நவீனமயமாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றும் கடல் சார் விளைபொருட்கள் ஏற்றுமதியும் அதிகரித்து வருவதாக இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், “ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் படகின் விலை தோராயமாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் ஆகும். நாட்டுப் படகு வைத்திருப்போர் ஆழ்கடல் மீன்பிடி படகு வாங்குவதற்கு படகின் விலையில் 60 சதவீதத் தொகை அரசு மானியமாக வழங்குகின்றது. மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் நல்வாழ்விலும் அரசு அக்கறை கொண்டுள்ளது.

மீனவப்பெண்கள் வருவாய் ஈட்ட மாற்று வேலைகளில் ஈடுபடலாம். கடல் பாசி வளர்த்தல், சுகாதாரமான முறையில் நவீனமாக கருவாடு உற்பத்தி செய்தல், இறால் குஞ்சு வளர்ப்பு போன்றவற்றில் இவர்கள் ஈடுபடலாம். முத்ரா போன்ற கடன் வழங்கும் திட்டங்கள் மூலம் மூலதனத்துக்கான கடன்களை இவர்கள் பெற்றுக் கொள்ளலாம். அரசின் பல்வேறு கடன் திட்டங்கள் மூலமாக தண்டல் முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளவு அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். காலாப்பட்டு, ராஜ்பவன், மணவெளி தொகுதிகளில் ரூ. 100 கோடி செலவு மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுக மேம்பாடு, இறங்குமுகம் அமைத்தல் ஆகியவற்றுக்கான திட்டத்துக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான தொடக்க விழா நடைபெறும்” என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்