ஆப்நகரம்

இந்தியாவை ஆளும் பணக்காரப் பெண்கள்!

அதிகம் சொத்து படைத்த இந்தியாவின் பணக்கார பெண்கள் இவர்கள் தான்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 6 Apr 2023, 11:33 am
அம்பானி, அதானி உள்ளிட்ட இந்தியாவின் அதிகம் சொத்து படைத்த கோடீஸ்வரர்கள் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல, அதிக சொத்து படைத்த பெண்களுக்கான பட்டியலும் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் சாவித்ரி ஜிண்டால் முன்னிலை வகிக்கிறார். அவர் ஆண் - பெண் என ஒட்டுமொத்தமாக நாட்டின் பெரிய பணக்காரர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே நேரத்தில் பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
Samayam Tamil rich list


இந்தியாவின் பில்லியனர் பெண்களின் பட்டியலில் கிரண் மஜும்தார் ஷா, சாவித்ரி ஜிண்டால், ரோஷ்னி நாடார் உள்ளிட்ட பல பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அதிக சொத்து படைத்த பணக்கார இந்தியப் பெண்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் எந்தெந்த பெண்கள் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று இங்கே பார்க்கலாம்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் 73 வயதான சாவித்ரி ஜிண்டால் முதலிடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் 94வது இடத்தில் இவர் இருக்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள். சாவித்ரி ஜிண்டால், ஜிண்டால் குழுமத்தின் நிறுவனர் ஓம்பிரகாஷ் ஜிண்டாலின் மனைவி ஆவார். எஃகு உள்ளிட்ட பல துறைகளில் இவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு ஓபி ஜிண்டால் இறந்த பிறகு, முழு வணிகத்தையும் சாவித்ரி ஜிண்டால் பார்த்து வருகிறார்.

இந்த பட்டியலில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவும் இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 5.9 பில்லியன் டாலர் அல்லது ரூ.47,650.76 கோடி ஆகும். இந்தப் பட்டியலில் அவர் தொடர்ந்து 30ஆவது இடத்தில் உள்ளார்.

ஃபால்குனி நாயரின் பெயரை நிறையப் பேர் கேள்விப்பட்டிருப்பார்கள். சமீபத்தில் Nykaa தனது பங்குகளை சந்தையில் பட்டியலிட்டது. நைக்காவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஃபால்குனி நாயர், நாட்டின் பணக்கார பெண்களில் ஒருவர். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, அவரது சொத்து மதிப்பு சுமார் 2.7 பில்லியன் டாலர் அல்லது ரூ.22,192 கோடி ஆகும். நைக்காவின் பங்குகளில் பாதியை ஃபால்குனி நாயர் வைத்திருக்கிறார்.

பார்மா துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மசூம்தார் ஷாவின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நாட்டின் பணக்காரப் பெண்களில் நீண்ட காலமாக இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, அவரது சொத்து மதிப்பு தற்போது சுமார் 2 பில்லியன் டாலர் அல்லது ரூ.16,438 கோடி ஆகும். பயோகான் நிறுவனம் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் அறிக்கையில் இவரது பெயர் 68வது இடத்தில் உள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்