ஆப்நகரம்

அடுத்த கட்ட கோதுமை விற்பனை எப்போது? மத்திய அரசு அறிவிப்பு!

மின்னணு ஏலம் மூலம் கோதுமையின் இரண்டாவது விற்பனை பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 5 Feb 2023, 9:02 am
கோதுமைக்கான அடுத்த விற்பனை 2023 பிப்ரவரி 15 புதன்கிழமையன்று நாடு முழுவதும் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil wheat price


இந்தியாவில் அதிகரித்து வரும் கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் படி, இந்திய உணவுக் கழகம் 25 லட்சம் டன் கோதுமை கையிருப்பில் 22 லட்சம் மெட்ரிக் டன்னை மத்தியத் தொகுப்பில் இருந்து மின் ஏலத்துக்கு வழங்கியது. உள் நாட்டுத் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் பல்வேறு வழிகளில் சந்தைகளில் விற்பனை செய்ய 2023 பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் மின் ஏலம் நடைபெற்றது.

இந்த மின் ஏலத்தில், முதல் வாரத்தில் 1150க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் பங்குபெற்றதுடன் நாடு முழுவதும் 9.2 லட்சம் மெட்ரிக் டன் அளவு கோதுமை விற்பனையானது. பிப்ரவரி 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற்ற முதல் மின் ஏலத்தில் வெற்றிகரமாக ஏலம் எடுத்த அனைத்து ஏலதாரர்களும் பணத்தை செலுத்தி நாடு முழுவதும் உள்ள சம்பந்தப்பட்ட கிடங்குகளில் உள்ள சரக்குகளை உடனடியாக எடுத்துச் சென்று அந்தந்த சந்தைகளில் கிடைக்கச் செய்யுமாறு இந்திய உணவுக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

விலைகளை மேலும் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மின் ஏலத்தில் விற்கப்படும் கோதுமை எடுத்துச் செல்லப்பட்டு, சந்தையில் ஆட்டா விற்பனைக்கு வந்த பிறகு விலை மேலும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் நடந்த மின்னணு ஏலம் மூலம் இரண்டு நாட்களில் 9.2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை இந்திய உணவுக் கழகம் விற்பனை செய்திருந்தது. கையிருப்பில் இருந்த 24 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில் 22 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் ஸ்கில் இந்தியா திட்டம்!
மேலும், மின்னணு ஏலம் மூலம் நாடு முழுவதும் கோதுமை விற்பனை. 2023 மார்ச் மாதம் 2ஆவது வாரம் வரை ஒவ்வொரு புதன் கிழமையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின் ஏலத்தின் முதல் வாரத்தில், 100 முதல் 499 மெட்ரிக் டன்கள் வரை அதிகபட்ச தேவை இருந்தது. அதைத் தொடர்ந்து 500-1000 மெட்ரிக் டன்கள், அதைத் தொடர்ந்து 50-100 மெட்ரிக் டன் என விற்பனை செய்யப்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர மாவு ஆலைகள் மற்றும் வியாபாரிகள் ஏலத்தில் தீவிரமாக பங்கேற்றனர். அதிகபட்சமாக 3000 மெட்ரிக் டன்னை 27 ஏலதாரர்கள் ஒரே தவணையில் பெற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கோதுமை விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்