ஆப்நகரம்

சாட் ஜிபிடி உதவியால் செமஸ்டர் தேர்வில் 94 மார்க் வாங்கிய மாணவர்!

ChatGPT: சாட் ஜிபிடியை பயன்படுத்தி செமஸ்டர் தேர்வில் 94 மதிப்பெண் வாங்கியுள்ளதாக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 20 Apr 2023, 3:18 pm
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் செயல்பட்டு வரும் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் 2022 நவம்பர் மாதம் சாட் ஜிபிடி (ChatGPT) என்ற ஏஐ சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. ஏஐ துறையில் புதிய திருப்புமுனையாக கருதப்படும் சாட் ஜிபிடி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Samayam Tamil openai chatgpt
openai chatgpt


சக மனிதரை போல உரையாடுவது, எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வது, கோடிங் செய்வது, கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது என சர்வ வேலைகளையும் சாட் ஜிபிடி உடனடியாக செய்து முடிக்கிறது. இந்நிலையில், கல்விக்கும் சாட் ஜிபிடி கைகொடுக்கும் என தெரியவந்துள்ளது.

மாணவர் ஒருவர் தனது செமஸ்டர் தேர்வுகளுக்கு உதவும்படி சாட் ஜிபிடியிடம் உதவி கேட்டு, சாட் ஜிபிடி சொன்னதை படித்து செமஸ்டர் தேர்வில் 94 மதிப்பெண் வாங்கியுள்ளதாக பிரபல சமூக வலைதளமான ரெடிட்டில் (Reddit) தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாததால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வந்ததால் அவருக்கு பயம் வந்துள்ளது. அந்த நேரத்தில்தான் சாட் ஜிபிடியிடம் தனக்கு உதவி கிடைக்குமா என அவர் முயற்சி செய்துள்ளார்.

தேர்வுக்கு முக்கியமான தலைப்புகளை மட்டும் தேர்வு செய்து அதில் கவனம் செலுத்தி படிப்பதற்கு சாட் ஜிபிடி உதவியுள்ளது. இதற்காக அவர் முதலில் பாடங்களை சாட் ஜிபிடிக்கு அனுப்பியுள்ளார். அதற்கு சாட் ஜிபிடி அளித்த பதிலும் மிகப்பெரியதாக இருந்தது.

பின்னர் பாடங்களையே ஆன்லைனில் எளிமைப்படுத்தி சாட் ஜிபிடிக்கு கொடுத்துள்ளார். அவர் நினைத்ததை போலவே சாட் ஜிபிடி எளிதாக பதில் அளித்துள்ளது. முக்கியமான பாடங்களை மட்டும் தேர்வு செய்து சாட் ஜிபிடி பரிந்துரைத்துள்ளது.

பின்னர் சாட் ஜிபிடி பரிந்துரைத்ததை மட்டும் அவர் படித்துள்ளார். அதன்பின் செமஸ்டர் தேர்வுக்கு சென்றபோது சாட் ஜிபிடி பரிந்துரைத்த பாடங்களை பற்றிய கேள்விகளே பெரும்பான்மையாக வந்திருந்தன. இதனால் அந்த மாணவர் செமஸ்டர் தேர்வில் 94 மதிப்பெண் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் தேர்வில் யாரையும் ஏமாற்றவில்லை எனவும், சாட் ஜிபிடி சொன்னதை கேட்டு 72 மணி நேரம் படித்ததாகவும், சாட் ஜிபிடியை ஒரு ஆசிரியரை போலவும், பயிற்சியாளரை போலவும் மட்டுமே பார்ப்பதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்