ஆப்நகரம்

செக் பவுன்ஸ் பிரச்சினைக்கு தீர்வு.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செக் பவுன்ஸ் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

Samayam Tamil 19 May 2022, 2:15 pm
செக் பவுன்ஸ் (Cheque Bounce) வழக்குகள் பல லட்சக்கணக்கில் தேங்கி நிலுவையில் இருக்கும் நிலையில், செக் பவுன்ஸ் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Cheque Bounce


நாட்டில் பல லட்சக்கணக்கான செக் பவுன்ஸ் வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. 2019ஆம் ஆண்டு இறுதிவரை நாட்டில் 2.31 கோடி குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில் 35.16 லட்சம் வழக்குகள் செக் பவுன்ஸ் வழக்குகள் ஆகும்.

இதையடுத்து, செக் பவுன்ஸ் வழக்குகளை முடிப்பது தொடர்பாக 2020ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், பி.ஆர்.கவை, ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

GST: ஜிஎஸ்டி - மாநிலங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அப்போது, செக் பவுன்ஸ் வழக்குகள் மிக அதிகமாக உள்ள ஐந்து மாநிலங்களில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேச, ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் செக் பவுன்ஸ் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் பணி தொடங்கும் எனவும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட ஐந்து மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்