ஆப்நகரம்

ஸ்டார்ட் அப் துறையில் தத்தளிக்கும் தமிழ்நாடு!

ஸ்டார்ட் அப் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் இந்த ஆண்டும் தமிழகம் மண்ணைக் கவ்வியுள்ளது.

Samayam Tamil 15 Sep 2020, 5:15 pm
இந்தியாவிலேயே தொழில் தொடங்கவும் முதலீடு செய்யவும் சிறந்த மாநிலம் என்று தமிழகம் கூறிவந்தாலும், ஸ்டார்ட் அப் துறையில் பின்னடைவையே சந்தித்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கொண்ட இந்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தமிழகம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களுக்கான பட்டியலில் இந்த ஆண்டில் தமிழகம் ஒரு இடம் முன்னேறியிருந்தது. ஆனாலும் ஸ்டார்ட் அப் பிரிவில் தமிழகத்தின் நிலை மேம்படவே இல்லை.
Samayam Tamil start up


குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறுவதற்கான தகுதி தமிழகத்துக்கு இருப்பதாகவும், இருந்தாலும் கொள்கைகள் சரியாக உருவாக்கப்படாததால் தமிழகம் பின்தங்கியே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஸ்டார்ட் அப் துறையை முன்னேற்றுவதற்கான சரியான கொள்கைகள் தமிழகத்திடம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஸ்டார்ட் அப் & புத்தாக்கத் திட்டமும் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ease of doing business: தமிழகத்தை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?

புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு உகந்த சூழல் பெங்களூரு, தேசியத் தலைநகர்ப்பகுதி, மும்பை ஆகிய நகரங்களில் இருக்கும் அளவுக்கு தமிழகத்தில் இல்லை என்று கூறுகின்றனர். ஒப்புதல்கள் பெறுவதில் சிக்கல், அதிக செலவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் இருக்கின்றன. எனினும் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஸ்டார்ட் அப் துறையில் தமிழகம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி காண்டும் என்று டை சென்னை நிறுவனத்தின் துணைத் தலைவரான அருண் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களுக்கான பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் இருந்தது. தமிழகத்துக்கு 14ஆவது இடம் மட்டுமே கிடைத்தது. தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருந்தாலும், அதிக முதலீடுகள் கிடைத்தாலும் தேசிய அளவிலான இந்தப் பட்டியலில் முன்னிலை பெறவில்லை என்பது தமிழக தொழில் துறைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

”தமிழகத்தில் மின்சாரம், தண்ணீர், தொழிலாளர் சக்தி, அமைதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் தொழில் தொடங்குதற்கு ஏதுவாக இருக்கின்றன. ஆனால், ஒப்புதல் வழங்குவதில் தாமதம், உரிமங்கள் கொடுப்பதில் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் பலர் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களைத் தேடிச் செல்கின்றனர்” என்று தமிழ்நாடு உணவு தானியங்கள் வர்த்தகக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்