ஆப்நகரம்

கடன் வாங்க அனுமதி வேண்டும்: தமிழக நிதியமைச்சர் வேண்டுகோள்!

அடுத்த நிதியாண்டில் மாநிலங்கள் கடன் பெறுவதில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாதென்று மத்திய அரசை தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 31 Dec 2021, 12:43 pm
பல்வேறு மாநில நிதியமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். 2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய நிதி இணையமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதியமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Samayam Tamil ptr


கொரோனா பாதிப்பு காலத்தில் தங்களது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கடன் வாங்கும் வரம்புகளை அதிகரித்தல், மாநிலங்களுக்கு மீண்டும் கடன்களை வழங்குதல், மூலதன செலவினங்களுக்கான சிறப்பு உதவி போன்ற ஆதரவுக்காக மத்திய அரசுக்கு பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், மத்திய பட்ஜெட் உரையில் சேர்ப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சருக்கு வழங்கினார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பாகக் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்த வேண்டும் எனவும், இதனால் மாநிலங்களின் நிதிச் செலவுகளும், நிதி நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அடுத்து வரும் நிதியாண்டில் மாநிலங்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கடனுதவி பெறுவதற்கு வழிவகை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

மொத்த உள்மாநில உற்பத்தியில் 5 சதவீதம் வரை கடன் பெறு அனுமதி தருமாறும் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை வைத்தார். கொரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வேலையின்மையும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இதற்கு சிறப்புத் திட்டம் வகுத்து வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் எனவும் தமிழக நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்