ஆப்நகரம்

கடும் கோபத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்.. ஜாக்டோ ஜியோ முடிவுக்கு கண்டனம்!

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்ட அறிவிப்பும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையும் ஒரு நாடகம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 10 Apr 2023, 12:53 pm
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதாக போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால், தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்தது. ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் உள்ளிட்ட அமைச்சகள் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியது.
Samayam Tamil jacto geo


இந்நிலையில், தமிழக அரசும் ஜாக்டோ - ஜியோவும் கூட்டணி அமைத்து நடத்திய நாடகத்தின் அடுத்த காட்சியும் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்களை பொருளாதார ரீதியாக மட்டுமல்லாது நிர்வாக ரீதியாகவும் வஞ்சித்து வரும் தமிழக அரசின் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாக தமிழகத்தின் சகல பகுதி அரசு ஊழியர்களும், ஆசியர்களும் அரசின் மீது கோபத்தின் உச்சத்தில் இருந்தனர்... இருக்கின்றனர்.

அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோபத்தை மட்டுப்படுத்த, மழுங்கடிக்க தமிழக அரசினுடைய ஏற்பாட்டின்படி சில போராட்டங்களை அறிவிப்பதையும், அரசு அழைத்துள்ளது, பேசச் செல்கிறோம் என்று அறிவித்து பேச்சு வார்த்தைக்கு சென்று வெறும் கையுடன் திரும்புவதையும், வாடிக்கையாக கொண்டுள்ளது ஜாக்டோ - ஜியோ.

தமிழக தி.மு.க விடியல் அரசும் ஜாக்டோ - ஜியோவும் இணைந்து கடந்த காலங்களில் நடத்திய பல நாடகங்களைப் போல தற்சமயம் அரங்கேற்றிய அடுத்த காட்சியும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நேரத்தில் 10/02/2016 அன்று அன்றைய TNGEA அறிவித்த போராட்டம் துவங்கவிருந்த நிலையில், 9-2-2016 இரவு 8 மணிக்கு அமைச்சர்களுடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின் இதே போன்று முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவை அறிவிக்கிறோம்... போராட்டத்தை ஒத்தி வையுங்கள்... அம்மா நிச்சயம் நல்ல முடிவுகளை அறிவிப்பார் என்று அன்றைய OPS தலைமையில் பேச்சு வார்த்தை நடத்திய அமைச்சர்கள் மன்றாடி கேட்டுக் கொண்டதை ஏற்காமல், கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போராட்டத்தை ஒத்தி வைக்க முடியாது என அமைச்சர்களின் முன்னிலையில், போராட்டம் தொடரும் என R.தமிழ்செல்வி மற்றும் பாலு தலைமையிலான நிர்வாகிகள் அறிவித்த நிகழ்வை நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டமே.. முன்னெடுப்போம்! சமரசமற்ற களப் போராட்டங்களை என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில மையம் தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்