ஆப்நகரம்

கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jul 2022, 6:24 pm
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அவர்களின் கோரிக்கைக்கு இன்று பலன் கிடைத்துள்ளது.
Samayam Tamil salary


கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் 2020 ஜாவரி 1ஆம் தேதியிலிருந்து சம்பள உயர்வு குறித்த கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கைக்கு தமிழக அரசு தற்போது செவி சாய்த்துள்ளது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வினைத் தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி 2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப, 23 சதவீதம் வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வால் பணியாளர்களுக்கு குறைந்த பட்சமாக 2,259 ரூபாயும், அதிகபட்சமாக 14815 ரூபாயும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

இந்த உத்தரவின் மூலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் சுமார் 1,675 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்