ஆப்நகரம்

ரேஷன் கடைகளில் மோசடி.. பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீதும் குற்றங்கள் தொடர்பாகவும் புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 8 Mar 2023, 7:45 am
அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசு விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil ration shop


உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980இன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 26 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.5,23 ,741 (ரூபாய் ஐந்து லட்சத்து இருபத்து மூன்றாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று மட்டும்) மதிப்புள்ள 669 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி, 137 எரிவாயு உருளைகள், 30 கிலோ கோதுமை, 585 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்!

மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 33 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட 106 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980இன் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்க 044 -24338971 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு தருமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்