ஆப்நகரம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்!

மாநிலம் முழுவதும் CPS ஒழிப்பு அமைப்பினர் போராட்டம்.

Samayam Tamil 8 Jul 2022, 8:39 am
தமிழகத்தில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக அரசு ஊழியர்கள் கடிதம்.
Samayam Tamil tamil nadu govt employees write letter to chief minister mk stalin through district collectors for old pension scheme
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்!


புதிய பென்சன் திட்டம்!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், சீருடைப் பணியாளர்களுக்கு 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பலன்கள் இல்லை!

மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வுக்கால பலன்கள் இத்திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த மேண்டுமென தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் பலகட்டப் போராட்டங்கள் மூலமாகத் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன.

தேர்தல் வாக்குறுதி!

கடந்த 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அன்று அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

பங்களிப்பு ஓய்வூதிய ஒப்பந்தம்!

பங்களிப்பு ஓய்வூதியச் சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இன்று வரையில் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. மேலும் இத்திட்டத்தில் சேருவது மாநில அரசுகளின் விருப்புரிமையைப் பொறுத்தது.

மற்ற மாநிலங்கள்!

வாக்குறுதி வழங்காத ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர்கள் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுக் கால வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநில முதல்வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.

பணிக்கொடை இல்லை!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதிலும் மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் பணியின் போது இறந்தவர்களுக்கும் பணிக்கொடை வழங்கி உள்ளனர். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு பணிக்கொடையும் வழங்கவில்லை.

முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை!

தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக முதல்வர் மனமிறங்கி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்!

மேற்கூறிய கோரிக்கைகளைக் கடிதமாக எழுதி அரசு ஊழியர்கள் சார்பாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் மூலமாக முதல்வருக்கு அனுப்பி தங்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய அம்சங்கள்!

திமுக தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பதே இவர்களின் முதன்மைக் கோரிக்கையாகும். அரசு ஊழியர்களின் மற்றொரு முக்கியமான கோரிக்கையாக இருப்பது பணிக்கொடை. ஓய்வு பெறும் சிபிஎஸ் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கிட வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் போராட்டம்!

கடிதம் அனுப்புவது ஒரு புறம் இருக்க, ஜூலை 7ஆம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் சேலம், விருதுநகர், தேனி, செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் CPS ஒழிப்பு அமைப்பினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்