ஆப்நகரம்

iPhone 15 உற்பத்தி செய்யப்போகும் TATA.. கிரீன் சிக்னல் கொடுத்த Apple!

டாடா குழுமம் ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களை உற்பத்தி செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 14 May 2023, 7:53 pm
டாடா குழுமம் (Tata Group) விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 series) மொபைல்களை உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil iphone
iphone


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட பொருட்களை தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. இதில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆலைகள் சென்னை அருகே அமைந்துள்ளன.

விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆலை பெங்களூரு அருகே இயங்கி வந்தது. ஆனால் இந்தியாவில் இருந்து வெளியேற விஸ்ட்ரான் முடிவு செய்துள்ளதால், பெங்களூரு அருகே உள்ள விஸ்ட்ரான் ஆலையை டாடா குழுமம் ஏற்கெனவே வாங்கிவிட்டது. இதுமட்டுமல்லாமல் ஓசூரில் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஆலையையும் டாடா நிறுவனம் அமைத்து வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்நிலையில், ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களை டாடா குழுமம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் ஐபோன்களுக்கான சிறிய ஆர்டர்களை மட்டுமே டாடா குழுமம் பெற இருக்கிறது. இது டாடா குழுமத்துக்கு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது பொருட்களை அதிகளவில் சீனாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், இந்தியாவிலும் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியாவில் கவனம் செலுத்தவும் ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் இந்தியா வந்திருந்தார். அப்போது மும்பை, டெல்லியில் ஆப்பிள் ஸ்டோர்களை திறந்துவைத்தார். மேலும் அவர் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோரையும் சந்தித்ததாக தகவல் வெளியானது.

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் முடிவு செய்துள்ள நிலையில், டாடா குழுமமும் ஐபோன் உற்பத்தியில் களமிறங்க தயாராகியுள்ளது. தற்போது இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் சென்னை முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்