ஆப்நகரம்

நிலக்கரித் துறையில் முதலீடு.. மும்பையில் மெகா மாநாடு!

நிலக்கரி துறையில் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் வகையில் நிலக்கரி அமைச்சகம் மும்பையில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது.

Senthil Kumar | Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 29 Nov 2022, 8:48 pm
இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நிலக்கரி ஆலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாட்டில் நிலக்கரி வாயிலான மின்சார உற்பத்தி மட்டுமே சுமார் 70 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான போதிய நிலக்கரி இருப்பில் இல்லாததால் மின்சார உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டு அது மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் இந்தப் பிரச்சினை நீடித்து வந்தது.
Samayam Tamil coal


அதிகமான அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டாலும், அது மின்சார உற்பத்திக்குப் போதுமான அளவில் இல்லை. அதுவும் கோடைக்காலத்தில் மின்சாரப் பயன்பாடு அதிகமாகவே இருக்கும் என்பதால் இக்காலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று அஞ்சப்பட்டது. ஓரளவுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் இந்தியாவில் இப்போது நிலக்கரி தட்டுப்பாடு குறைந்துள்ளது. அதற்குக் காரணம் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து வருவதே ஆகும்.


இந்நிலையில் நிலக்கரி உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரித்து முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் நடவடிகையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நிலக்கரி சுரங்க ஏலத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. நிலக்கரி ஏலத்தைப் பொறுத்தவரையில், முதல் 5 கட்டங்களில் 64 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட நிலையில் 6ஆவது கட்டமாக 133 சுரங்கங்களுக்கான ஏல நடைமுறைகளை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியது.

Coal: முரட்டுத்தனமான வளர்ச்சியில் நிலக்கரி உற்பத்தி!
இதில் 21 புதிய நிலக்கரி சுரங்கங்களும், ஏற்கெனவே ஏலம் விடப்பட்டு மீண்டும் ஏலத்துக்கு வந்த 62 சுரங்கங்களும் அடங்கும். வணிக ரீதியிலான இந்த ஏலத்தில் தொழில்நுட்ப அல்லது நிதி ரீதியிலான தகுதிகள் ஏதும் இடம்பெறாத நிலையில், ஏற்கனவே நிலக்கரி சுரங்க ஏலத்தில் பங்கு பெறாத ஏலதாரர்களும் வெற்றிகரமாக சுரங்கங்களை ஏலம் எடுத்தனர்.

ஏலம் எடுப்பவர்களின் பங்கேற்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் நிலக்கரி அமைச்சகம் மும்பையில் டிசம்பர் 1ஆம் தேதி முதலீட்டாளர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டிற்கு நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமை வகிக்கிறார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நிலக்கரித் துறை இணையமைச்சர் ராவ்சாஹிப் பாட்டீல் தன்வீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

விரிவான ஆலோசனைகளுக்கு பின்னர் சுரங்கங்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் கீழ் வரும் சுரங்கங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், 40 சதவீதத்துக்கும் அதிகமான காடுகள், அதிக அளவில் கட்டிடங்கள் உள்ள பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள சுரங்கங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. வணிக ரீதியான ஏலங்களுக்கு நிலக்கரி அமைச்சகத்துக்கு பரிவர்த்தனை ஆலோசனை நிறுவனமாக செயல்பட்டு வரும் எஸ்பிஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனம், ஏலத்தை நடத்துவதில் நிலக்கரி அமைச்சகத்துக்கு உதவி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்