ஆப்நகரம்

போணியாகாத புகையிலை... நிவாரணம் கோரும் விவசாயிகள்!

பல கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளதால் அரசு உடனடியாக குறுக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 May 2020, 8:39 pm
கொரோனா ஊரடங்கின் விளைவாக ரூ.4,400 கோடி மதிப்புள்ள புகையிலை பயிர்கள் விற்பனையாகாமல் தேங்கிவிட்டதால், புகையிலை விவசாயிகளுக்காக மத்திய அரசு நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டுமென அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Samayam Tamil புகையிலை விவசாயிகள்


இதுகுறித்து அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்ட ஊரடங்கின் விளைவாக சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தேவை குறைந்துவிட்டதால் புகையிலைக்கான தேவை குறைந்துள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று பருவங்களுக்கான பயிர் கடன்களுக்கு மறு அட்டவணை தயாரிக்க அரசு குறுக்கிட வேண்டும். விவசாயிகள் கடன்களை ஒவ்வொரு பருவமும் 30 விழுக்காடு பிரித்து செலுத்த அனுமதிக்க வேண்டும்.

புகையிலை விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடியை போக்க தவறினால் அவர்கள் கடும் கடன் சுமையில் தள்ளப்படுவார்கள். இதனால் குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவரும் அடங்கிய தொழில் சூழல் சேதமடையக்கூடும். குஜராத் மாநிலத்தில் 330 மில்லியன் கிலோ புகையிலை தேங்கியுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2,700 கோடியாகும்.

புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளதால் சரக்குகளை வர்த்தகர்கள் வாங்குவதில்லை. மறுபுறம், ரூ.1,700 மதிப்புள்ள 130 மில்லியன் கிலோ புகையிலை ஏலங்களில் விற்பனை செய்யப்படுவதற்காக காத்திருக்கின்றன. நீண்டகாலமாக விற்பனையாகாமல் சேமிக்கப்பட்டு இருந்தால் புகையிலையின் தரம் குறைந்துவிடும்.

ஆகவே, உடனடியாக அனைத்து புகையில் ஏல நிலையங்களிலும் ஏலத்தை தொடங்கும்படி அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த 2-3 பருவங்களுக்கான பயிர் கடன்களை மறு அட்டவணை செய்யும்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்