ஆப்நகரம்

CEO என்றால் சம்பளம் உயர்வு.. தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைப்பு.. உழைப்பாளர் தினத்தில் அதிர வைக்கும் ரிப்போர்ட்!

உயர் பதவியில் இருக்கும் CEOக்கள் அதிக சம்பள உயர்வு பெற்ற நிலையில், தொழிலாளர்களுக்கோ சம்பள குறைப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 1 May 2023, 1:08 pm
கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் CEOக்களின் சம்பளம் 9% உயர்ந்துள்ள நிலையில், ஊழியர்களின் சம்பளம் 3% குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Samayam Tamil it workers
it workers


இன்று மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் Oxfam நிறுவனம் சர்வதேச அளவில் தொழில் நிறுவனங்களில் நிலவும் ஊதிய சமமின்மை மற்றும் ஊதிய வேறுபாடுகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி இந்தியா உள்பட உலகம் முழுவதும் 2022ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை பதவியில் உள்ள CEOக்களின் ந்சம்பளம் 9 சதவிதம் உயர்ந்துள்ளது. மறுபுறம் ஊழியர்களின் சம்பளமோ 3 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் முதல் 150 CEOக்கள் கடந்த ஆண்டு சராசரியாக 1 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றுள்ளனர். இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2 சதவீதம் உயர்வாகும்.

இந்தியாவில் ஒரு சராசரி ஊழியர் ஒரு ஆண்டு முழுவதும் சம்பாதிக்கும் ஊதியத்தை ஒரு இந்திய CEO வெறும் நான்கு மணி நேரத்தில் சம்பாதித்துவிடுவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டில் இந்திய ஊழியர்கள் சராசரியாக ஆறு நாட்களுக்கு இலவசமாக வேலை செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதாவது, ஊழியர்களின் சம்பளம் விலைவாசிக்கு ஏற்றவாறு அல்லாமல் மிகவும் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மறுபுறம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் CEOக்களின் சம்பளம் விலைவாசியையும் தாண்டி 9% உயர்ந்துள்ளது. விலைவாசியை கணக்கில் எடுக்காவிட்டால் CEOக்களின் சம்பளம் 16% உயர்ந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் 50 நாடுகளில் 100 கோடி தொழிலாளர்களின் சம்பளம் சராசரியாக 685 டாலர் குறைந்துள்ளது. மொத்தமாக சேர்த்தால் அவர்களின் ஊதியம் 746 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.

பெண்கள், குழந்தைகளின் நிலை இதை விட மோசம். ஒவ்வொரு மாதமும் பெண்களும், குழந்தைகளும் மொத்தமாக 380 பில்லியன் மணி நேரம் சம்பளமே இல்லாமல் வேலை செய்துள்ளனர்.

இதுகுறித்து Oxfam International நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அமிதாப் பெஹர், “சம்பளத்தை குறைவாக வைத்திருக்க வேண்டும் என கார்ப்பரேட் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நிறைய பணத்தை கொடுத்துக்கொள்கின்றனர்.

பெரும்பாலான ஊழியர்கள் குறைந்த சம்பளத்துக்கு அதிக நேரம் வேலை செய்கின்றனர். மேலும் விலைவாசியை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். ஒவ்வொரு முறையும் நெருக்கடி ஏற்படும்போது தொழிலாளர்களே பலியாடுகளாக மாறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்