ஆப்நகரம்

மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு உத்தரவு.. இதைச் செய்தே ஆகவேண்டும்!

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் இதைச் செய்தே ஆகவேண்டும் என்று ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 17 Feb 2023, 10:29 pm
இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், நெட்வொர்க் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இக்கூட்டத்தில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனவும், தரமான சேவையை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil network


மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெரும்பான்மையான குற்றச்சாட்டு என்பது, பேசிக் கொண்டிருக்கும்போது நெட்வொர்க் கட் ஆவது மற்றும் கால் தானாகவே மியூட் ஆகிவிடுகிறது என்பதும்தான். இந்தப் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனவும் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் டிராய் உத்தரவிட்டுள்ளது. இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினை என்பது தெரியாத நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள். இவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான குறுஞ்செய்திகளை 60 நாட்களுக்குள் தடை செய்ய வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைக்கும் என்று டிராய் அறிவுறுத்தியுள்ளது.

நெட்வொர்க் நிறுவனங்களின் செயல்பாடுகள், வாடிக்கையாளர்களுக்கான சேவை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை மிகவும் கூர்மையுடன் கவனித்து வருவதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசிய டிராய், அதற்கான ஆயத்தப் பணிகளில் நெட்வொர்க் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் எனவும், 24/7 என்ற அடிப்படையில் நிறுவனங்கள் கண்காணிப்புடன் இருந்து மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரிடமுமே மொபைல் போன் உள்ளது. சாதாரண கூலி வேலை பார்ப்பவர்கள் கூட போன் வைத்துள்ளனர். அதுவும் நிறையப் பேர் ஸ்மார்ட்போனுக்கு மாறிவிட்டனர். அதேபோல, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களும் உயர்ந்துவிட்டன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கான நெட்வொர்க் சேவையில் தொடர்ந்து பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவில் தரமான நெட்வொர்க் சேவையைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்