ஆப்நகரம்

சுங்கக் கட்டணம் உயர்வு.. லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி போராட்டம் செய்கின்றனர்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 23 Mar 2023, 4:07 pm
சுங்கக் கட்டண உயர்வு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. கட்டண உயர்வுக்கு அரசு தரப்பிலிருந்து நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும் அது வாகன ஓட்டிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. சாலைகளை சரியாகப் பராமரிக்காமல், சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சுங்கக் கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுவதால் லாரி உரிமையாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
Samayam Tamil truck


இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் முன்பு மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 1ம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து லாரி உரிமையாளர்களும் கலந்துகொண்டு லாரி உரிமையாளர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான அளவில் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், சுங்கச் சாவடிகளில் வருமானம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் சுங்கக் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும், சுங்க கட்டணத்தை தனியார் சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். இதைக் கண்டித்து, வரும் ஏப்ரல் 1ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

கடந்த 20ம் தேதி நடந்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்