ஆப்நகரம்

எங்களுக்கு வேற வழி தெரியல... ஊழியர்களை வெளியேற்றிய உபர்

இந்தியாவில் 600 ஊழியர்களை வெளியேற்றுவதாக உபர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 26 May 2020, 12:59 pm
கொரோனா பாதிப்பால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் பல பெருநிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றுவதாக தினசரி செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. ஏற்கெனவே, ஸ்விகி, ஜொமாட்டோ, லைவ்ஸ்பேஸ், ஐபிஎம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளன. மறுபுறம், ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதாகவும் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Samayam Tamil உபர் ஆட்குறைப்பு


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மொக மோசமாக இருக்கும் நிலையில் அந்நாட்டில் பல பெருநிறுவனங்களும், சில்லறை வர்த்தக நிறுவனங்களும், பிராண்டுகளும் திவாலாகும் நிலை உருவாகியுள்ளது. இதையொட்டி, உபர் நிறுவனம் உலகம் முழுக்க 6,700 ஊழியர்களை வெளியேற்றப்போவதாக அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் 600 ஊழியர்களை வெளியேற்றுவதாக உபர் இந்தியா நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உபர் இந்தியா மற்றும் தெற்காசியப் பிரிவின் தலைவர் பிரதீப் பரமேஸ்வரன், “கோவிட்-19 தாக்கம் கணிக்கமுடியாத வகையில் இருப்பது மட்டுமல்லாமல், எப்போது தொழிலை மீட்க முடியும் என்பது தெரியவில்லை. ஆகையால், ஊழியர்களை குறைப்பதை தவிர உபர் இந்தியாவுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆகவே, ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 600 முழு நேர ஊழியர்களின் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் உபர் அறிவித்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே இது.

வெளியேற்றப்படும் ஊழியர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உபருக்கும், நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும் அவர்களது பங்களிப்புக்கு மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வெளியேறும் ஒவ்வொரு ஊழியருக்கும் 10 வாரங்களுக்கான சம்பளம், அடுத்த ஆறு மாதங்களுக்கான மருத்துவக் காப்பீடு, புதிய வேலை பெறுவதற்கான ஆதரவு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா கொள்ளை நோய் தாக்கத்தால் இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் உபர் நிறுவனம் 290 கோடி டாலரை இழந்துள்ளது. மே 3ஆம் தேதி முதல் இந்தியாவில் உபர் நிறுவனம் மீண்டும் சேவைகளை தொடங்கியுள்ளது. எனினும், கொரோனா அச்சத்தால் பெரும்பாலான மக்கள் கேப் பயணங்களை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். உபரின் போட்டி நிறுவனமான ஓலாவும் 1,400 ஊழியர்களை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்