ஆப்நகரம்

Infosys நிறுவனத்தால் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு ரூ.68 கோடி லாபம்!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் டிவிடெண்ட் வாயிலாக ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு 68 கோடி ரூபாய் வருமானம் கிடைக்க இருக்கிறது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 14 Apr 2023, 12:21 pm
இன்ஃபோசிஸ் டிவிடெண்ட் (Infosys dividend) வாயிலாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) மனைவி அக்ஷதா மூர்த்திக்கு (Akshata Murty) சுமார் 68.07 கோடி ரூபாய் வருமானம் கிடைக்க இருக்கிறது.
Samayam Tamil infosys
infosys


அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி மட்டுமல்ல, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் ஆவார். தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 3.89 கோடி பங்குகள் அக்ஷதா மூர்த்தியிடம் இருக்கின்றன.

இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் இருந்து டிவிடெண்ட் வாயிலாக பல கோடி ரூபாய் வருமானத்தை அக்ஷதா மூர்த்தி சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் காலாண்டு முடிவுகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில், 2023ஆம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 17.50 ரூபாய் வழங்கப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

ஆக, ஒரு பங்குக்கு 17.50 ரூபாய் டிவிடெண்ட் எனில் அக்ஷதா மூர்த்தியிடம் இருக்கும் 3.89 கோடி இன்ஃபோசிஸ் பங்குகளுக்கு மொத்தமாக 68.07 கோடி ரூபாய் டிவிடெண்ட் வருமானமாக கிடைக்க இருக்கிறது.

ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால டிவிடெண்டாக இன்ஃபோசிஸ் நிறுவன 16.50 ரூபாய் அறிவித்தது. இதனால் அவருக்கு ஏற்கெனவே 64.18 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்தது. இப்போது மீண்டும் 68.07 கோடி ரூபாய் எனில் மொத்தமாக அக்ஷதாவுக்கு 132.25 கோடி ரூபாய் டிவிடெண்ட் வருமானமாக கிடைத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், அக்ஷதாவிடம் இருக்கும் இன்ஃபோசிஸ் பங்குகளின் தற்போதைய மதிப்பு சுமார் 5360 கோடி ரூபாய். இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அக்ஷதா மூர்த்தியின் கணவரும், இங்கிலாந்து பிரதமருமான ரிஷி சுனக் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றாலும், அக்ஷதா இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்கிறார். எனவே, இங்கிலாந்தில் அக்ஷதாவுக்கு non-domiciled அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் இன்ஃபோசிஸ் டிவிடெண்ட் வாயிலாக அக்ஷதாவுக்கு கிடைக்கும் பல கோடி ரூபாய் வருமானத்துக்கு இங்கிலாந்தில் அவர் வரி செலுத்த தேவை இல்லை. இது ஏற்கெனவே இங்கிலாந்தில் சர்ச்சையாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்