ஆப்நகரம்

உங்கள் LIC பணம் பாதுகாப்பா இருக்கா? அதானியில் எவ்வளவு முதலீடு? அரசு பதில்!

அதானி நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் செய்துள்ள முதலீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் அரசு பதில்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 8 Feb 2023, 12:48 pm
அதானி குழுமம் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது. அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
Samayam Tamil lic adani
lic adani


இதைத்தொடர்ந்து, அதானி பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்துவிட்டது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த கவுதம் அதானி 20 இடங்களுக்கு கீழே பின் தள்ளப்பட்டார். இதுமட்டுமல்லாமல், அதானி பத்திரங்களின் மதிப்பும் சரிந்துவிட்டது.

இந்த விவகாரத்தை பொறுத்த வரையில், அதானி குழுமத்தில் எல்ஐசி (LIC) நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், இதனால், பாலிசிதாரர்களின் பணம் ஆபத்தில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ வங்கி அதானிக்கு நிறைய கடன் வழங்கியுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், அதானி நிறுவனங்களில் எல்ஐசி செய்துள்ள முதலீடுகள் குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் நிதித் துறை இணை அமைச்சர் பகவத் கிசன்ராவ் அளித்துள்ள பதிலில், அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளில் 30,127 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2022 டிசம்பர் 31 நிலவரப்படி அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனத்துக்கு இருக்கும் மொத்த பங்கு 35,917.31 கோடி ரூபாய் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் பங்குகள், கடன் இரண்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளில் அதானி நிறுவனங்களில் 30,127 கோடி ரூபாய்க்கு பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், 2023 ஜனவரி 27ஆம் தேதி நிலவரப்படி அவற்றின் சந்தை மதிப்பு 56,142 கோடி ரூபாயாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனத்தின் முதலீடுகள் அதன் ஒட்டுமொத்த சொத்துகளில் 1% கீழ் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 2022 செப்டம்பர் 30 நிலவரப்படி எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருக்கும் சொத்துகளின் மதிப்பு (AUM) 41.66 லட்சம் கோடி ரூபாய்.

இதுமட்டுமல்லாமல், அதானி நிறுவனங்களுக்கு எஸ்பிஐ வங்கி (SBI) 27,000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இது எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ள மொத்த கடன்களில் 0.88% ஆகும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்