ஆப்நகரம்

US Fed: மீண்டும் வட்டி உயர்வு.. பெடரல் ரிசர்வ் முடிவால் அதிர்ச்சி!

அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 May 2023, 11:19 am
அமெரிக்க பெடரல் ரிசர்வ் நேற்று தனது கொள்கை முடிவுகளை வெளியிட்டது. அதன்படி பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியுள்ளது. இத்துடன் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்துவதை நிறுத்திக்கொள்ளும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Samayam Tamil interest rate
interest rate


அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் இந்த கொள்கை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கி உள்பட உலகம் முழுவதும் பல்வேறு மத்திய வங்கிகள் பணவீக்கத்தை குறைப்பதா அல்லது வளர்ச்சியை கவனிப்பதா என வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த ஒரு ஆண்டுகாலமாக வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 6.50 சதவிதமாக உயர்த்திய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் நிறுத்திவிட்டது. இந்த சூழலில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவு மீது எதிர்பார்ப்பு எழுந்தது.

இதுமட்டுமல்லாமல், வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் திவாலாகி நெருக்கடியை சந்தித்தன. இந்த சூழலில் பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டியை உயர்த்துமா என சந்தேகம் எழுந்தது.

இத்தகைய நிலையில் நேற்று பெடரல் ரிசர்வ் கொள்கை அறிவிப்புகள் வெளியாகியது. அதில், வட்டி விகிதத்தை 0.25% உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. வட்டி உயர்வை நிறுத்தும் நிலையை நெருங்கிவிட்டோம் அல்லது ஏற்கெனவே வந்துவிட்டோம் என பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பணவீக்கம் இன்னும் தலையாய பிரச்சினையாக இருப்பதாகவும், வட்டி விகிதம் உயர்த்தப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதா என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது எனவும் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவது பொருளாதார மந்தநிலையை வேகப்படுத்தும் என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தைகள் சரிந்தன.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்