ஆப்நகரம்

Air India: ஏர் இந்தியாவின் மெகா டீல்.. அமெரிக்க அதிபர் முதல் உலக தலைவர்கள் பாராட்டு!

ஏர் இந்தியா நிறுவனம் 470 புதிய விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ் அதிபர் ஆகியோர் பாராட்டு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 15 Feb 2023, 11:46 am
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய பின் ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த ஏர்லைன் நிறுவனமாக மாற்ற வேண்டும் என டாடா குழுமம் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஏர் இந்தியாவில் பல்வேறு மாற்றங்களையும் டாடா குழுமம் கொண்டுவந்துள்ளது.
Samayam Tamil air india
air india


இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக சுமார் 500 விமானங்களௌ வாங்குவதற்கு மிகப்பெரிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, அமெரிக்காவை சேர்ந்த பிரபல போயிங் நிறுவனத்திடம் 220 விமானங்களை வாங்குவதற்கு ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கும் மிகப்பெரிய ஆர்டரை ஏர் இந்தியா கொடுத்துள்ளது. மொத்தமாக புதிதாக 470 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குகிறது.

உலக வரலாற்றிலேயே இது மிகப்பெரிய விமான கொள்முதல் ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியாவின் ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவொரு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் என புகழ்ந்துள்ளார். மேலும் அவர், “உற்பத்தி துறையில் உலகையே அமெரிக்கா வழிநடத்தும். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் 200க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்குவதற்கு ஏர் இந்தியா, போயிங் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றி அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் 44 மாகாணக்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவு கிடைக்கும். அவர்களில் பலருக்கு 4 ஆண்டு கல்லூரி டிகிரி கூட தேவைப்படாது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா - இந்தியா பொருளாதார கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியாவின் ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரன் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தால் இங்கிலாந்தும் பயன்பெறும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அதாவது, ஏர்பஸ் விமானங்களுக்கான இறக்கைகள் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இதனால் இங்கிலாந்துக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி பலன்களும் கிடைக்கும் என ரிஷி சுனக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்