ஆப்நகரம்

இந்திய அரசுடன் மோதல்: வோடஃபோனுக்கு வெற்றி!

இந்திய அரசுக்கு வோடஃபோன் நிறுவனம் ரூ.20,000 கோடி செலுத்தத் தேவையில்லை என்று தீர்ப்பு கிடைத்துள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 4:40 pm
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான வோடஃபோன், இந்தியாவிலும் சேவை வழங்கி வருகிறது. இந்தியாவின் மிக முக்கியமான நெட்வொர்க் நிறுவனமாகவும் வோடஃபோன் இந்தியா திகழ்கிறது. ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இந்நிறுவனம் ஐடியா நெட்வொர்க்குடன் இணைந்து சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய அரசுடன் வோடஃபோன் நிறுவனம் வரி தொடர்பான வழக்கு ஒன்றில் முட்டி மோதியது. அதாவது, ஹட்சிசன் வேம்போவா நிறுவனத்தின் இந்திய மொபைல் நெட்வொர்க் சொத்துகளை வோடஃபோன் வாங்கியதற்கு வரி விதிக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
Samayam Tamil vodafone


செலுத்த வேண்டிய வரியில் வட்டித் தொகை ரூ.12,000 கோடி, அபராதம் ரூ.7,900 கோடி என மொத்தம் ரூ.20,000 கோடி செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தொகையைச் செலுத்த வோடஃபோன் நிறுவனம் மறுத்து வந்தது. 2007ஆம் ஆண்டில் சொத்துகள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு வோடஃபோன் நிறுவனத்துக்கே சாதகமாக முடிந்தது. ஆனாலும் வரி செலுத்துவது தொடர்பான விதிமுறைகளை மாற்றிய இந்திய அரசு, இந்த வட்டி மற்றும் அபராதத் தொகையைச் செலுத்தித்தான் ஆக வேண்டும் என்று முறையிட்டது.

சென்னையில் வீடு வாங்கலாமா? என்ன விலையில் கிடைக்குது?

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு கிடைத்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரத்தை மையமாகக் கொண்ட சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய அரசின் இந்த உத்தரவானது இந்தியா - நெதர்லாந்து இடையேயான முதலீட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, வோடஃபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூடச் செலுத்தத் தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த வழக்கில் வோடஃபோன் நிறுவனம் சந்தித்த இன்னல்களுக்காக இந்திய அரசுதான் ரூ.40 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்