ஆப்நகரம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்!

மோடி அரசு காரணமா?

Samayam Tamil 19 Feb 2021, 4:20 pm
பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியிருக்கும் நிலையில், இந்த அளவுக்கு விலை உயரக் காரணம் என்ன என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்...
Samayam Tamil what is the reason behind petrol price hike in india
பெட்ரோல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்!


தண்ணி காட்டும் பெட்ரோல் விலை!

இந்தியாவில் தற்போது மிகப் பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது பெட்ரோல் விலை உயர்வு. தங்கத்தை விட பெட்ரோல் விலைதான் அதிகமாக உயர்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தியில் உள்ளன. அதுவும் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நாட்டு மக்களிடையே நிதி நெருக்கடி நிலவும் சூழலில் இப்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுவது மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை. ஒன்று சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம். இரண்டு, உள்நாட்டில் அதிக வரி. கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசின் வருவாய் இழப்பை ஈடுகட்ட, பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு ரூ.32.98 ஆக உயர்த்தியது மத்திய அரசு. அதுவரையில் பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.19.83 ஆக இருந்தது. இதுமட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்கள் பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரியையும் கடுமையாக உயர்த்தின.

கச்சா எண்ணெய் விலையேற்றம்!

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றத்துக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் மிக முக்கியக் காரணமாகும். பிப்ரவரி 18 நிலவரப்படி, சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 65.09 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பு காலத்தில் 2020 ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 19 டாலராகக் குறைந்திருந்தது. கச்சா எண்ணெய்க்கான தேவை குறைவாக இருந்தபோதும், அதன் விலையை உயர்த்துவதற்காக பெட்ரோலியம் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 9.7 மில்லியன் பேரல் குறைத்தன.

மோடி ஆட்சியில்...

2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றபோது, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.71 ஆகவும் இருந்தது. அதன் பின்னர் இப்போது வரையில் பெட்ரோல் விலை 26 சதவீதமும், டீசல் விலை 42 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆனால் இதே காலத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலரிருந்து 65 டாலராகக் குறைந்துள்ளது. ஆனாலும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மோடி அரசின் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. ஆனால், இந்த நிலைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று நரேந்திர மோடி மறைமுகமாகக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்