ஆப்நகரம்

கிரிப்டோகரன்சியில் கைவரிசை.. ரூ.110 கோடி அபேஸ்!!

பிரபல கிரிப்டோ வர்த்தக தளமான கிரிப்டோ.காம் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்து 110 கோடி வரை திருட்டில் ஈடுபட்ட ஹேக்கர்கள்...

Samayam Tamil 21 Jan 2022, 6:32 pm
கிரிப்டோ.காம் (Crypto.com) ஒரு சர்வதேச பரிமாற்றத் தளமாகும். சமீபத்தில் இந்த கிரிப்டோ வர்த்தகத் தளம் ஹேக்கர்களால் தாக்கப்பட்டு, அதன் நூற்றுக்கணக்கான பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிறுவனத்தின் பாதுகாப்பையும் மீறி இத்திருட்டு நடைபெற்றுள்ளதாகவும் அதில் இருந்த கிரிப்டோ பயனாளர்களின் கணக்குகளிலிருந்து சுமார் 15 மில்லியன் டாலர் எதிரியம் டோக்கன்கள் (தோராயமாக ரூ.110 கோடி) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கிரிப்டோ.காம் சிஇஓ கிரிஸ் மார்செலாக் கூறியுள்ளார்.
Samayam Tamil crypto scam


இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள மார்செலாக், இதன் மூலம் வாடிக்கையாளர் நிதி ரீதியாக எந்த இழப்பையும் சந்திக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்த ஹேக் சம்பவத்தைத் தொடர்ந்து நிறுவனத்தின் உள்கட்டமைப்புகள் கடினமாக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 14 மணி நேரத்திற்கு இத்தளம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு நிறுவனமான பெக்‌ஷீல்ட் (PeckShield) கிரிப்டோ.காம் வர்த்தக தளத்தின் ஹேக் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் டொர்னாடோ கேஷ் (Tornado Cash) போன்ற கருவிகள் மூலம் எதிரியம் டோக்கன்களுக்கு அனுப்பப்படும் இறுதி இலக்கை மறைக்க முடியும். இதைச் செய்வதன் மூலம், கிரிப்டோ.காமிலிருந்து திருடப்பட்ட தொகை எந்த வகையிலும் திரும்பப் பெறப்படாமல் இருப்பதை ஹேக்கர் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிரிப்டோ.காம் தற்போதைக்கு அதன் அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்தியுள்ளது. இந்த ஹேக் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஹேக் எப்படி நடந்தது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி எனவும் மார்செலாக் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்