ஆப்நகரம்

கிரிப்டோ கரன்சி: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

Samayam Tamil 13 Nov 2021, 9:34 pm
கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்சி பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கிரிப்டோ கரன்சி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைக் காட்டிலும் கிரிப்டோ கரன்சிகளில் நிறையப் பேர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் சட்டப்பூர்வமற்றது என்பதால் இதற்கு இந்தியாவில் இன்னும் முழு ஆதரவு கிடைக்கவில்லை. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இதை இன்னும் முழுமையாக ஆதரிக்கவில்லை.
Samayam Tamil crypto


முதலீடு செய்பவர்கள் இதில் ஏற்படும் இழப்புகளையும் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கண்ணுக்குத் தெரியாத கரன்சி என்பதால் இதில் முதலீடு செய்ய ஒரு தரப்பினர் அச்சம் கொண்டுள்ளனர். இந்நிலையில், கிரிப்டோ கரன்சி மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து மத்திய அரசு இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் ரிசர்வ் வங்கி, நிதித் துறை மற்றும் சில அதிகாரிகளுடன் இந்த ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

கிரிப்டோகரன்சி - வரப்போகிறது கிரிப்டோ ஏடிஎம் கார்டுகள்!
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு இளைஞர்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. அதனால்தான் கிரிப்டோ கரன்சிக்குத் தடையும் விதிக்காமல் முழுமையாகவும் ஆதரிக்காமல், அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விரைவில் கிரிப்டோ கரன்சி தொடர்பான சட்ட திட்டங்கள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் சமீபத்தில்தான் அதற்கான தடையை ரிசர்வ் வங்கி நீக்கியது. அதன் பின்னர் நிறையப் பேர் கிரிப்டோ கரன்சிகளில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். நல்ல லாபம் தருவதாகவே தெரிகிறது. அதனால் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை முறைப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது போன்றவற்றில் மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தவறான செய்திகளைப் பரப்பி இளைஞர்களை கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் முனைப்பில் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்